’மகாகும்பமேளா 2025’ ரெடியான உத்தர பிரதேச அரசு! டெல்லியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சி
டெல்லி: உத்தரபிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டாட உத்தர பிரதேச அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், டெல்லியில், மகாகும்பமேளாவின் சிறப்புகளை விளக்கும் வகையில் முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் உள்பட பல்வேறு வெளிநாட்டு தூதர்களும் பங்கேற்றனர்.
உலகின் மிகப்பெரிய ஆன்மீக நிகழ்ச்சிகளில் ஒன்றாக 'மகா கும்பமேளா' உள்ளது. உத்தர பிரதேசத்தில் பிரயாக்ராஜில் ஒவ்வொரு வருடமும் கும்பமேளாவும், 12 வருடங்களுக்கு ஒருமுறை மகா கும்பமேளாவும் நடைபெறுகிறது. வரும் 2025 ஜனவரியில் மகா கும்பமேளா தொடங்க உள்ளது.

இந்த மகாகும்பமேளா நிகழ்ச்சியை பிரமாண்டமாக கொண்டாட உத்தர பிரதேச அரசு ரெடியாகி வருகிறது. ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து, விரிவான ஏற்பாடுகளை அம்மாநில அரசு செய்துள்ளது. உத்தர பிரதேச சுற்றுலாத்துறையும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் மகா கும்பமேளாவை முன்னிட்டு உத்தர பிரதேச சுற்றுலாத்துறை சார்பில் சிறப்பு அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், உத்தர பிரதேச சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெய்வீர் சிங் மற்றும் முக்கிய பிரமுகர்கள், வெளிநாட்டு தூதர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கும்பமேளாவின் வரலாறு, பாரம்பரியம் உள்ளிட்டவற்றை ஹைலைட் செய்து காட்டபட்டது.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர், " இந்தியாவை ஒரே இடத்தில் நீங்கள் பார்க்க விரும்பினால் கும்பமேளாவிற்கு கண்டிப்பாக நீங்கள் செல்ல வேண்டும். இந்தியாவின் ஈடு இணையற்ற ஆன்மிக சிறப்பை சுமந்து நிற்கிறது" என்றார்.
மேலும் கும்பமேளாவிற்கு வருகை தரும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் விசிட்டர்களுக்கு செய்யப்பட்டுள்ள சிறப்பான ஏற்பாடுகள் குறித்தும் பேசினார். உத்தர பிரதேச அமைச்சர் ஜெய்வீர் சிங் பேசுகையில், " இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமைக்கு ஒரு சான்றாக மகா கும்பமேளா -2025 இருக்கும்" என்றார்.

மகா கும்பமேளாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், பாரம்பரியம் முதல் தற்கால நவீனகட்டமைப்புகள் வரை நிகழ்ச்சியில் செய்யப்பட இருக்கும் ஏற்பாடுகளை உத்தர பிரதேச சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு விரிவாக விளக்கி காட்டினார். இந்த நிகழ்ச்சியில் மலேசியா, சுவிட்சர்லாந்து, நேபாளம், சீஷெல்ஸ் உள்ளிட்ட நாடுகளின் துணை தூதர்களும் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications