அஜித் பவார் ஏமாற்றவில்லை.. சிவசேனாதான் ஏமாற்றியது.. என்ன நடக்குமென்று பாருங்கள்.. அமித் ஷா காட்டம்
பாஜகவை என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் ஏமாற்றவில்லை, சிவசேனாதான் ஏமாற்றியது என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார்.
டெல்லி: பாஜகவை என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் ஏமாற்றவில்லை, சிவசேனாதான் ஏமாற்றியது என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார்.
ஒருவழியாக மகாராஷ்டிரா அரசியல் பிரச்சனை முடியும் நிலையை எட்டி இருக்கிறது. மகாராஷ்டிராவின் முதல்வராக இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார். அவர் மகாராஷ்டிராவின் 18வது முதல்வராவார். அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அங்கு பாஜகவிற்கு அளித்த வந்த ஆதரவை என்சிபியின் அஜித் பவார் வாபஸ் வாங்கினார்.இதனால் அங்கு அஜித் பவார் துணை முதல்வர் பதவியில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்து தேவேந்திர பட்னாவிஸும் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன பேட்டி
இந்த நிலையில் நியூஸ்18 சேனலின் ஜார்கண்ட் தேர்தல் நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அதில், மகாராஷ்டிராவில் தனித்த பெரிய கட்சியாக இருந்தும் கூட எங்களால் ஆட்சி அமைக்க முடியவில்லை. அங்கு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா கட்சிக்கு அதிகார மோகம்.

இணைந்துள்ளார்
அதனால் அவர்கள் இணைந்துள்ளனர். அவர்களுக்கு என்று ஒரு கொள்கை இல்லை. அஜித் பவார் எங்களுக்கு ஆதரவு அளித்ததை தவறு என்றோ, தவறான கணிப்பு என்றோ சொல்லலாம். ஆனால் அவர் எங்களை ஏமாற்றிவிட்டார் என்று சொல்ல மாட்டேன். சரத் பவாரும் எங்களை ஏமாற்றவில்லை.

ஏமாற்றம்
சரியாக சொல்லப்போனால் என்சிபியும் எங்களை ஏமாற்றவில்லை. என்சிபி எங்களை எப்போதும் எதிர்த்து இருக்கிறது. ஆனால் எங்களை உத்தவ் தாக்கரேதான் எங்களை ஏமாற்றி உள்ளார். சிவசேனா கட்சிதான் எங்களை ஏமாற்றி இருக்கிறது. சிவசேனா எங்களுடன்தான் இணைந்து போட்டியிட்டது.

மக்கள்
ஆனால் மக்களை மதிக்காமல் அவர்கள் கூட்டணி மாறியுள்ளனர். இது போன்ற சமயங்களில் தொண்டர்கள் கோபம் அடைவார்கள். அப்படி நடந்தால் அவர்கள் என்ன செய்வார்கள் என்று தெரியும். எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும்.

என்ன நடக்கும்
ஆனால் அதை பற்றி நான் இப்போது பேச மாட்டேன். நாங்கள் எப்போது சிவசேனாவிற்கு முதல்வர் பதவியை தருவோம் என்று கூறவே இல்லை. ஆனால் சிவசேனா பொய் சொல்கிறது. அவர்களுக்கு மக்கள் பாடம் கற்றுத்தருவார்கள்.

வழக்கு என்ன
அஜித் பவாருக்கு எதிரான வழக்கு அவர் எங்களுடன் இருந்தாலும் தொடர்ந்து இருக்கும். அது உறுதி. நாங்கள் எங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். யார் கொள்கை மாறி கூட்டணி வைத்தது என்று மக்களுக்கு தெரியும், என்று அமித் ஷா கோபமாக குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications