ஹரியானா 'மரண அடி'யில் இருந்து மீளாத ராகுல்! டெல்லி, மும்பையில் 'பரபர' மகாராஷ்டிரா தேர்தல் ஆலோசனை!
டெல்லி: ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த மரண அடியில் இருந்து இன்னமும் அக்கட்சி மீண்டு வரவில்லை. ஹரியானாவைப் போல மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் தோற்றுவிடக் கூடாது என்பதற்காக டெல்லி, மும்பையில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியிருக்கிறது காங்கிரஸ் மேலிடம். மகா விகாஸ் அகாடி கூட்டணியின் தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, பிரசார வியூகம் குறித்து டெல்லி மற்றும் மும்பையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டது.
ஹரியானா சட்டசபை தேர்தலில் 10 ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலையை எளிதாக அறுவடை செய்திருக்க வேண்டிய காங்கிரஸ் மிதமிஞ்சிய நம்பிக்கையால் கோட்டை விட்டது. ஹரியானாவில் காங்கிரஸ் பெரும் தோல்வியை சந்தித்தது அக்கட்சியினரை கடும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இதனால் அடுத்து நடைபெறும் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்ள இப்போதே காங்கிரஸ் படுதீவிரமாக களமிறங்கிவிட்டது. ஹரியானா தேர்தல் முடிவுகள் வெளியான நாளே மகாராஷ்டிரா மாநில மேலிடப் பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதாலா மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர்கள், தேர்தல் தொடர்பாக கருத்துகள் தெரிவிக்க உடனடியாக வாய்ப்பூட்டு போடப்பட்டது. மேலும் காங்கிரஸுக்குள் இருந்து கொண்டு கலகம் விளைவித்த எம்.எல்.ஏக்கள் மீதும் நடவடிக்கைகள் பாய்ந்தன.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் லோக்சபா எதிர்ர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து முதலில் விவாதிக்கப்பட்டதாம். இதனையடுத்து ஹரியானாவில் தேர்தல் அறிக்கை, வாக்குறுதிகள் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை; இதனை மகாராஷ்டிரா தேர்தலில் எப்படி சரி செய்வது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாம். அடுத்ததாக மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல்கள், அதனை முடிவுக்கு கொண்டு வருவது, மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் முன் நிற்கும் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டனவாம்.
முன்னதாக மும்பையில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதாலா தலைமையில் தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலும் மகாராஷ்டிரா தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டம். மும்பை கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நானா படோலே, மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி ஆட்சி அமைக்கும். நாங்கள் கூட்டணி கட்சிகளுடன் இணைந்தே செயல்படுவோம். மகா விகாஸ் அகாடி கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் எந்த சிக்கலும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications