மகாராஷ்டிரா நம்பிக்கை வாக்கெடுப்பு.. முறைகேட்டை தவிர்க்க 4 முக்கிய நிபந்தனை.. உச்சநீதிமன்றம் அதிரடி
Recommended Video
டெல்லி: மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை மாலை 5 மணிக்குள், பட்னாவிஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் இன்று வழங்கிய தீர்ப்பில், நம்பிக்கை வாக்கெடுப்பு நியாயமாக நடைபெற சில நிபந்தனைகளை விதித்துள்ளது நீதிமன்றம்.
உ.பி. முதல் மகாராஷ்டிரா வரை... 20 ஆண்டுகளில் பரபரப்பை ஏற்படுத்திய நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்குகள்!
அந்த முக்கிய நிபந்தனைகள் இவைதான்:
1) நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வேண்டும்
2) நம்பிக்கை வாக்கெடுப்பு ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடைபெற கூடாது. சட்டசபைக்குள் அனைவர் முன்பாகவும், வெளிப்படையாக வாக்குப்பதிவு நடத்திதான், நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவை அறிவிக்க வேண்டும்.
3) இந்த விவகாரத்தில் ஒளிவு மறைவு இருக்க கூடாது என்பதால், தொலைக்காட்சிகளில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதை நேரலையில் காட்ட வேண்டும்.
4) இப்போதைய சபாநாயகரை தவிர்த்துவிட்டு, இடைக்கால சபாநாயகரை தேர்ந்தெடுத்து, அவர் மூலமாகத்தான் வாக்கெடுப்பு நடக்க வேண்டும்.
இவ்வாறு அதிரடி நிபந்தனைகளை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் முன்பாகவே, அனைத்து எம்எல்ஏக்களும் பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
கர்நாடகாவில் எடியூரப்பா கடந்த வருடம் ஆட்சியமைத்தபோது, இதுபோல அதரடியாக உத்தரவை பிறப்பித்தது சுப்ரீம் கோர்ட். எனவே 24 மணி நேரத்திற்குள், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சியை இழந்தார் அவர். ஆனால் இப்போது பிற கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளார்.
சுப்ரீம் கோர்டின் இன்றைய உத்தரவும், கர்நாடக உத்தரவை நினைவுபடுத்தும் வகையில் இருப்பது கவனிக்கத்தக்கது. இதன் மூலம், இதுபோன்ற அரசியல் சூழ்நிலைகளில், சுப்ரீம் கோர்ட், ஒரே மாதிரி முடிவுகளைத்தான் எடுக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
குதிரை பேரத்தை தவிர்க்க உடனே, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் வாதம் சுப்ரீம் கோர்ட்டில் எடுபட்டுள்ளது.