மகர சங்கராந்திக்கு மட்டுமே திறக்கப்படும் மர்ம கோயில்.. கோட்டைக்குள் மறைந்து இருக்கும் ரகசியம்
இம்பால்: ஆண்டுக்கு ஒரே ஒருநாளில் அதாவது மகர சங்கராந்திக்கு மட்டுமே திறக்கப்படும் ஒரு வினோதமான கோயில் மத்திய பிரதேசத்தில் உள்ளது. அஜய்கர் கோட்டையில் உள்ள இந்தக் கோவிலில் நிரந்தரமான சிலைகள் எதுவும் இருக்காது. மகரசங்கரந்திக்காக மட்டும் ரேவா அருங்காட்சியகத்திலிருந்து கொண்டுவரப்பட்டு வழிபடப்படுகிறது. இந்தக் கோயிலில் கடைபிடிக்கப்படும் இந்த வினோதமான சடங்குகள் பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
அறுவடை திருநாள் தை 1 பொங்கல் விழா நாடு முழுவதும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் பொங்கல் விழாவாக கொண்டாடப்படும் நிலையில், வட இந்தியாவில் மகர சங்கராந்தி தினமாக கொண்டாடப்படுகிறது. மகர சங்கராந்தி நாளில் கோவில்களில் விசேஷ பூஜைகளும் நடைபெறுகின்றன.

ஒரே ஒரு நாள் மட்டும் திறக்கப்படும்
அந்த வகையில், மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கோவில் ஆண்டுக்கு ஒரே ஒருநாள் மட்டுமே திறக்கப்படுகிறது. இந்தக் கோவிலில் நடைபெறும் தனித்துவமான பூஜைகள் பக்தர்களையும் சுற்றுலா பயணிகளையும் கவருவதாக உள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள அந்தக் கோவில் பற்றிய விவரம் வருமாறு:-
மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் அஜய்கர் கோட்டையில் பழமை வாய்ந்த கோவில் ஒன்று உள்ளது. இந்தக் கோயில் ஆண்டுக்கு ஒரே ஒருநாளில் மட்டுமே திறக்கப்படும். இதனால் இந்தக் கோயிலில் தரிசனம் செய்வதற்காக தொலைதூர பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகிறார்கள். சந்தேலர்களால் 9ஆம் நூற்றாண்டில் இந்தக் கோவில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
குளத்தில் நீராடும் பக்தர்கள்
அஜய்கர் கோட்டையில் உள்ள இந்தக் கோவில், பாபா அஜய்பாலுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். மகர சங்கராந்தி அன்று மட்டுமே திறக்கப்படுகிறது. இந்த அரிய நிகழ்வை காண மத்திய பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் திரள்கிறார்கள். இந்தக் கோவிலில் நிரந்தரமான சிலைகள் எதுவும் இருக்காது.
மகர சங்கராந்திக்காக மட்டும் அந்தச் சிலை ரேவா அருங்காட்சியகத்திலிருந்து கொண்டுவரப்பட்டு, ஒரே ஒரு நாளுக்கு மட்டும் வழிபாட்டிற்காக நிறுவப்படும். மத சடங்குகள் முடிந்த பிறகு, அது அருங்காட்சியகத்திற்குத் திருப்பிக் கொண்டு செல்லப்படுகிறது. மகர சங்கராந்தி நாளில் அருகிலுள்ள குளத்தில் நீராடுவதையும் பக்தர்கள் மிகவும் மங்களகரமானதாகக் கருதுகின்றனர்.
ரகசிய சுரங்கங்கள்
இந்த கோட்டையில், சீல் வைக்கப்பட்ட பல ரகசிய சுரங்கங்கள் உள்ளன. இந்த சுரங்கங்களுக்குள் சந்தேலர் காலத்தைச் சேர்ந்த பல புதையல்கள் இருப்பதாக நம்பப்படுகிறது, எனினும், அது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த கோவில் இருக்கும் இடம் மற்றும் கைவிடப்பட்ட நிலையில் இருப்பது போல, சூர்ய அஸ்தமனத்திற்கு அங்கு பலரும் செல்ல யோசிக்கிறார்கள். அதே நேரத்தில் சில தாந்திரீக சடங்குகளுக்காக இரவு நேரத்தில் சிலர் அங்கு செல்வதாகவும் சொல்லப்படுகிறது. இதுபோன்ற செயல்களால் இந்த கோயில் மர்மமான கோயிலாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications