ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரம்.. .இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற தலைவர்களுடன் கார்கே இன்று ஆலோசனை
டெல்லி: 'இந்தியா' கூட்டணியை சேர்ந்த நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே அவரது இல்லத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார். செப்டம்பர் மாதம் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றது. ஆனால், இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. அதேபோல ஒருபுறம் அமளி இருந்தாலும் மறுபுறம் டெல்லி நிர்வாக மசோதா, தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா போன்ற முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இருப்பினும் பெரும்பாலான நேரம் இரண்டு அவைகளும் அமளி காரணமாக முடங்கியே இருந்தன. பின்னர் ஒரு வழியாக கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், தற்போது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் மாதம் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தொடர் 5 அமர்வுகளாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இந்த கூட்டத்தொடரில் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்றும் எதிர்க்கட்சிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். எனவே இந்த கூட்டத்தொடரில் ஒற்றுமையுடன் எப்படி பாஜகவை எதிர்கொள்வது என்பது குறித்து இன்று இந்தியா' கூட்டணியை சேர்ந்த நாடாளுமன்ற குழு தலைவர்களுக்கான கூட்டம் கார்கே இல்லத்தில் நடைபெறுகிறது.
இந்தியா கூட்டணியை பொறுத்த அளவில் முதல் கூட்டம் பீகாரின் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரிலும், மூன்றாவது கூட்டம் மும்பையிலும் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது நான்காவது கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications