மீண்டும் உயிர் பெறும் "இந்தியா.." மம்தா எடுக்கும் முயற்சி.. விஜய் உள்ளே.. ஸ்டாலின் வெளியே!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இந்த முறை நடந்த சட்டசபைத் தேர்தலில் மம்தா தோல்வி அடைந்தார். சுமார் 15 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தை மம்தா ஆட்சி செய்து வந்த நிலையில், இந்த முறை தோல்வி அடைந்தார். குறிப்பாக அவர் தனது சொந்த பவானிபூர் தொகுதியிலேயே தோல்வி அடைந்தார். இதற்கிடையே மம்தா அடுத்தகட்டமாகத் தனது பார்வையைத் தேசிய அரசியல் பக்கம் திருப்பி, "இந்தியா" கூட்டணியைக் கூட்ட அவசர அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மேற்கு வங்கத் தேர்தலில், 215 இடங்களைக் கொண்டு அசுர பலத்துடன் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் வெறும் 80 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தது. இந்த இமாலயச் சரிவைத் தொடர்ந்து, தனது அரசியல் எதிர்காலத்தை மீட்டெடுக்க டெல்லியின் காங்கிரஸ் தயவை நாடும் நிலைக்கு மம்தா தள்ளப்பட்டுள்ளார்.

மம்தா பானர்ஜி
மேலும், அவர் பாஜகவுக்கு எதிராக மீண்டும் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்க அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டுமாறு வலியுறுத்தினார். மம்தா பானர்ஜி இன்று தான் இந்த அவசரக் கூட்டத்திற்கான அழைப்பை விடுத்துள்ளார் என்பதால், கூட்டணியின் பிற கட்சிகள் தங்கள் மௌனத்தைக் கலைக்கவில்லை. காங்கிரஸின் ஊடக தரப்பு இதற்குப் பதிலளிக்கவில்லை. இது குறித்துக் கேட்டால் "எங்களுக்கு எதுவும் தெரியாது" என்பதே பதிலாக இருக்கிறது. இருப்பினும், ஜூன் மாதத்தில் இந்தக் கூட்டம் நடக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் தங்களுக்கு இதுபற்றித் தெரியாது என்றும், மம்தா நேரடியாக அகிலேஷைத் தொடர்பு கொண்டால் ஜூன் கூட்டத்தில் பங்கேற்கலாம் என்றும் குழப்பமான விளக்கத்தைத் தந்துள்ளனர். அதேநேரம் மேற்கு வங்கத் தேர்தல் பிரச்சாரத்தின் போது திரிணாமுல் காங்கிரஸை ராகுல் காந்தி கடுமையாகச் சாடியிருந்தாலும், தேர்தல் தோல்விக்குப் பிறகு மம்தாவை தொலைப்பேசியில் அழைத்து ஆறுதல் கூறியுள்ளார்.
இந்தியா கூட்டணி
வாக்கு திருட்டு காரணமாகவே சுமார் 100 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸின் வெற்றி பறிபோனதாக ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தக் கொள்கையைக் கடுமையாகச் சாடியுள்ளார். அதாவது மாநில அளவில் வேறு வேறு கொள்கைகளைக் கொண்டிருந்தாலும் கூட தேசிய அளவில் ஒரே கூட்டணிக்குள் வரலாம் என்ற அடிப்படையில் மீண்டும் இந்தியா கூட்டணியில் இணைந்து பணியாற்ற மம்தா ஆர்வமாக இருக்கிறார்.
தமிழ்நாடு சிக்கல்
மம்தாவின் இந்த "இந்தியா" ஒருங்கிணைப்பு முயற்சிக்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக வந்து நிற்பது தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல்தான். தமிழ்நாட்டிலும் சரி, தேசியளவிலும் சரி கடந்த பல ஆண்டுகளாகவே காங்கிரஸுக்கு பக்கபலமாக இருந்தது திமுக தான். ஆனால், தமிழகத்தில் தேர்தல் முடிந்த கையோடு, திமுக கூட்டணியில் இருந்து விலகி ஓவர்நைட்டில் தவெக பக்கம் காங்கிரஸ் போனது. இதனால் இப்போது திமுக கடும் ஆத்திரத்தில் இருக்கிறது. காங்கிரஸுடன் இனி கூட்டணியே இல்லை என்று இளைஞரணி மாநாட்டில் தீர்மானம் கூட போடப்பட்டது.
மேலும், நாடாளுமன்றத்தில் தங்களுக்குத் தனி இருக்கை கேட்டு காங்கிரஸை விட்டு விலகி நிற்கிறது. இதனால், இந்தியா கூட்டணியில் திமுக நீடிக்குமா என்ற மிக பெரிய கேள்வியும் எழுந்துள்ளது.
தவெக
அதேநேரம் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக இப்போது இருக்கும் முதலமைச்சர் விஜய்யின் தவெகவும் விரைவில் 'இந்தியா' கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது. அடுத்த மாதம் தமிழ்நாட்டில் வரவிருக்கும் ராஜ்யசபா இடைத்தேர்தல் மூலம் தவெக நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பட்சத்தில், அது கூட்டணிக்குப் புதியதொரு பரிணாமத்தைக் கொடுக்கும்!












Click it and Unblock the Notifications