வெடித்து கிளம்பும் டெல்லி அரசு அதிகாரிகள் நியமன பிரச்னை! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மமதா ஆதரவு
டெல்லி: டெல்லி அரசு அதிகாரிகள் நியமன விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முழு ஆதரவளிப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி அரசுக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கும் இடையே தொடர் மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், இது குடிமைப்பணி அதிகாரிகளை நியமிப்பதிலும் தொடர்ந்தது. டெல்லி அரசு அதிகாரிகளை நியமிப்பதில் அதிகாரம் அற்றதாக இருந்ததால் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் ஆளுநர்தான் அதிகாரிகள் நியமனத்தில் முக்கிய பங்காற்றி வந்தார். இதனால் டெல்லி அரசுடன் கருத்து வேறுபாடு கொண்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

எனவே இந்த அதிகாரிகளுக்கும் மக்களின் பிரதிநிதிகளாக உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் போன்றவர்களுக்கும் இடையே தொடர் மோதல் போக்கு நீடித்தது வந்தது. இதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என நினைத்த டெல்லி அரசு இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு தொடர்பான மனுவில், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். ஆளுநர் இந்த அதிகாரத்தில் தலையிடக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தது.
இந்த மனு, தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி, ஹீமா கோலி, பி.எஸ்.நரசிம்மா அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த விசாரணையின் முடிவில் அதாவது கடந்த 11ம் தேதி நீதிபதிகள் ஒருமனதாக இந்த வழக்கில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். இந்த உத்தரவின்படி, "மக்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சட்டம் இயற்றும் அதிகாரம் டெல்லி சட்டசபைக்கு வழங்கப்பட்டுள்ளது" என்று கூறியிருந்தனர்.
மேலும், "ஜனநாயக ஆட்சியில் நிர்வாகத்தின் உண்மையான அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் வழங்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்கு ஒன்றே ஒன்றுதான். அதாவது, ஆட்சி நடப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இதுதான் மத்திய அரசின் வரம்பு. மற்றபடி ஆட்சியையோ, நிர்வாகத்தையோ கைப்பற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது. டெல்லியை பொறுத்த அளவில் நிலம், பொது ஒழுங்கு, காவல்துறை ஆகியவை மட்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். அதிகாரிகளை நிர்ணயிப்பது, நிர்வாகம் செய்வது, அதிகாரிகளை மாற்றம் செய்வது போன்றவற்றில் மாநில அரசுக்குதான் முழு அதிகாரம் இருக்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள், மக்கள் பிரிதிநிதிகள் கொடுக்கும் வழிக்காட்டுதல்களை அதிகாரிகள் பின்பற்றவில்லையெனில் அந்த இடத்தில் கூட்டு பொறுப்பின் கொள்கை பாதிக்கப்படும். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்கனவே இது தொடர்பான வழக்கு ஒன்றில் கடந்த 2019ம் ஆண்டு நீதிபதி அசோக் பூஷன் வழங்கிய தீர்ப்பில் இந்த அரசியல் சாசன அமர்வு உடன்படவில்லை. மக்கள் விருப்பத்தை பிரிதிநிதித்துவப்படுத்தி அதனை சட்டமாக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்படடுள்ளது. அரசாங்கத்தின் முடிவுகளுக்கு ஆளுநர்கள் கட்டுப்பட்டவர்கள், அமைச்சர்கள் குழுவின் முடிவுகளுக்கும் ஆளுநர்கள் கட்டுப்பட்டவர்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இது மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், டெல்லி அரசின் உயர் அதிகாரிகளின் பணி நியமனம், பணியிடை மாற்றம் உள்ளிட்டவை குறித்து முடிவெடுக்க முதலமைச்சர், தலைமை செயலாளர், முதன்மை உள்துறை செயலாளர் ஆகியோர் அடங்கிய, 'தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையத்தை' உருவாக்கி கடந்த 19ம் தேதி அவசர சட்டத்தை பிறப்பித்தது. ஆனால் ஏற்கனவே மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் ஆளுநர் இந்த விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று மத்திய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இப்படி இருக்கையில் மத்திய அரசு தனியாக இப்படி ஒரு அவசர சட்டத்தை கொண்டு வருவது உச்சநீதிமன்றத்தை அவமதிப்பது போன்றதாகும் என ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். எனவே இதற்கு எதிராக நாடு முழுவதும் பயணம் செய்து ஆதரவை திரட்டுவேன் என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இதனையடுத்து நேற்று மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவுக்கு சென்ற அவர், முதலமைச்சர் மமதா பானர்ஜியை சந்தித்து ஆதரவு கோரி
னால். இந்த விவகாரத்தில் டெல்லி அரசுக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் முழு ஆதரவு அளிக்கப்படும் என்று மமதா பானர்ஜி கூறியுள்ளார். அதேபோல எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக அல்லாத கட்சிகள் ஒன்றினைய வேண்டும் என்றும் பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். இந்த சந்திப்பின்போது பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஏற்கெனவே பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் கெஜ்ரிவாலுக்கு ஆதரவளித்திருந்த நிலையில், நாடு முழுவதும் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் ஆதரவு கேட்டு கெஜ்ரிவால் நாடு தழுவிய பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார். இது எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications