முறைகேட்டில் சிக்கியது என்னவோ சிசோடியா.. ஆனால் மோசடி தலைவன் கேஜ்ரிவால்.. மத்திய அமைச்சர் தாக்கு
புதுடெல்லி: "ஊழல் முறைகேட்டில் சிக்கியது என்னவோ மணீஷ் சிசோடியாவாக இருந்தாலும், மோசடி தலைவன் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்தான்" என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியுள்ளார்.
Recommended Video
டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு, புதிய மதுபானக் கொள்கையை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதன்படி, டெல்லி பல்வேறு மதுபான மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 800-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் மதுபானங்களை விற்பனை செய்ய தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டது. பரிசோதனை முறையில் அமல்படுத்தப்பட்ட இந்த புதிய மதுபானக் கொள்கைக்கு டெல்லி மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்ததால் கடந்த மாதம் 31-ம் தேதியுடன் இந்த புதிய கொள்கைக்கு டெல்லி அரசு முற்றுப்புள்ளி வைத்தது.

இதனிடையே, புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் ஆம் ஆத்மி அரசு பெரும் முறைகேட்டில் ஈடுபட்டதாக டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா குற்றம்சாட்டினார்.
இதன் தொடர்ச்சியாக, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய சிபிஐ, முறைகேட்டில் ஈடுபட்டதாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உட்பட 15 பேரின் பெயர்களை வழக்கில் சேர்த்தது.
இந்த சூழலில், இந்த வழக்கு தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். 15 மணிநேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நீடித்தது.
சிபிஐ சோதனை முடிந்த பிறகு மணீஷ் சிசோடியா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லியில் செய்து வரும் மக்கள் நலப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்காகவே இதுபோன்ற செயலில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக கூறினார். மேலும், வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கும், நரேந்திர மோடிக்கும் இடையேதான் போட்டி ஏற்படப் போவதாக கூறிய சிசோடியா, இந்த பயம் காரணமாகவே ஆம் ஆத்மியை மத்திய அரசு குறிவைப்பதாக தெரிவித்தார்.
மணீஷ் சிசோடியாவின் இந்த பேச்சு பாஜகவினரை ஆத்திரமடைய செய்துள்ளது. இதனால் அவர்கள் மணீஷ் சிசோடியாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் கூறுகையில், "இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது மணீஷ் சிசோடியாவின் முகம் வெளிறி போயிருந்தது. அவரால் எந்த கேள்விக்கும் பதில் கூற முடியவில்லை. மதுபான முறைகேட்டில் தற்போது சிக்கியிருப்பது சிசோடியாவாக இருந்தாலும், இதில் மூளையாக செயல்பட்ட மோசடி தலைவன் அர்விந்த் கேஜ்ரிவால்தான்" எனறார்.
இதேபோல, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், "2024 மக்களவைத் தேர்தலில் மோடிக்கும், கேஜ்ரிவாலுக்கும் இடையேதான் போட்டி என மணீஷ் சிசோடியா கூறியிருக்கிறார். ஒருவேளை அப்படி நடந்தால் பாஜகவுக்கு மிகவும் சவுகரியமாக இருக்கும். ஏனெனில் கேஜ்ரிவால் என்ற பெயரை பெரும்பாலான மக்கள் கேள்விப்பட்டு கூட இருக்க மாட்டார்கள். எனவே பாஜக அறுதி பெரும்பான்மையில் எளிதில் வெற்றி பெறும்" என்றார்.












Click it and Unblock the Notifications