பிச்சை எடுத்து தான் மகனின் கல்வி கட்டணத்தை கட்டினேன்.. கலங்கிய மணிஷ் சிசோடியா! தொண்டர்கள் வேதனை
டெல்லி: ஆம் ஆத்மி தலைவர்களைக் கைது செய்து ஆம் ஆத்மியை உடைக்க சிலர் முயன்றதாகக் கூறிய மணிஷ் சிசோடியா, சிறையிலேயே சிலர் தன்னிடம் பேரம் பேசியதாகவும் குறிப்பிட்டார். மேலும், கெஜ்ரிவாலுக்கு எதிராக எப்போதும் திரும்ப மாட்டேன் என்ற அவர், தனது வங்கிக் கணக்கையும் முடங்கிவிட்டதால் மகனுக்கு பீஸ் கட்ட கூட சிரமப்பட்டதாகத் தெரிவித்தார்.
டெல்லியில் ஆம் ஆத்மி சார்பில் இன்று நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

மணிஷ் சிசோடியா: அதாவது டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராகத் திரும்ப தனக்கு அழுத்தம் தரப்பட்டதாகக் கூறினார். தொடர்ந்து பேசிய மணிஷ் சிசோடியா, "அவர்கள் என்னை காலி செய்ய முயன்றனர். கெஜ்ரிவால் தான் என்னைப் பலிகடா ஆக்கினார் என்று எல்லாம் சொன்னார்கள். சிறையில் இருக்கும் போதே கெஜ்ரிவாலை மாட்டிவிட்டால் நீங்கள் தப்பிக்கலாம் என்று கூட பேரம் பேசினார்கள்" என்றார்.
கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கிய நிலையில், அவர் சிறையில் இருந்து வெளியே வந்துவிட்டார். இருப்பினும், அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இப்போது அதிஷி டெல்லி முதல்வராகப் பதவியேற்றுள்ளார். தானும் மணிஷ் சிசோடியாவும் மக்கள் தீர்ப்புக்கு பிறகே மீண்டும் பதவியேற்போம் எனச் சமீபத்தில் கெஜ்ரிவால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கெஜ்ரிவால் எனது குரு: இன்றைய நிகழ்வில் பேசிய மணிஷ் சிசோடியா, "பாஜக எனக்கு மறைமுகமாகத் தூது அனுப்பினர். கட்சி தாவுங்கள் இல்லையென்றால் சிறையிலேயே உயிரிழக்க நேரிடும் என்று எல்லாம் கூறினார்கள். அரசியலில் சுயநலம் தான் முக்கியம் என்றெல்லாம் சொன்னார்கள். என் குடும்பத்தைப் பற்றி, என் நோய்வாய்ப்பட்ட மனைவியைப் பற்றிச் சிந்திக்கச் சொன்னார்கள்.
26 வருடங்கள் நானும் அரவிந்த் கெஜ்ரிவாலும் இணைந்து பயணித்து வருகிறோம். இது ராமனிடம் இருந்து லக்ஷ்மணனைப் பிரிக்க முயல்வது போல.. அது எந்த ராவணன் நினைத்தாலும் முடியாது. கெஜ்ரிவால் எனது சகோதரரைப் போல.. எனது அரசியல் குரு.. அவருக்கு எதிராக எப்போதும் திரும்ப மாட்டேன்.
ஆம் ஆத்மியை உடைக்க முயற்சி: ஆம் ஆத்மி கட்சியை உடைக்க வேண்டும் என்பதற்காகவே பலரையும் கைது செய்தார்கள். ஜெயிலில் வைத்து எங்களை உடைத்துவிட முடியும். இதன் மூலம் ஆம் ஆத்மியை உடைத்துவிடலாம் என நினைத்துள்ளனர்" என்று கூறினார்.
பிச்சை எடுத்து: தொடர்ந்து சிறையில் தான் எதிர்கொண்ட நிதி பிரச்சினைகள் குறித்துப் பேசிய மணிஷ் சிசோடியா, "2002ஆம் ஆண்டில், நான் பத்திரிகையாளராக இருந்தபோது, 5 லட்சம் கொடுத்து ஒரு வீட்டை வாங்கினேன். அப்போது வாங்கிய வீட்டைக் கூட இப்போது பிடுங்கிவிட்டார்கள். என் மகனின் கல்விக் கட்டணத்தைக் கூட என்னால் கட்ட முடியவில்லை. அமலாக்கத் துறை எனது வங்கிக் கணக்கை முடக்கிவிட்டதால் கட்டணத்தைக் கூட செலுத்த முடியவில்லை. தெரிந்தவர்களிடம் எல்லாம் கேட்டு பிச்சை எடுத்துத் தான் அதைச் செலுத்தினேன். அந்தளவுக்குப் படுத்திவிட்டார்கள்" என்றார்.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்தாண்டு பிப். மாதம் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். சுமார் 1.5 ஆண்டுகள் சிறையில் இருந்த அவருக்குக் கடந்த மாதம் ஜாமீன் கிடைத்தது. கைது செய்யப்பட்ட போது மணிஷ் சிசோடியா டெல்லி துணை முதல்வராக இருந்தார். மேலும், பல துறைகளைக் கவனித்து வந்தார். ஆனால், கைதுக்குப் பிறகு அவர் அத்தனையையும் ராஜினாமா செய்தார்.












Click it and Unblock the Notifications