விடிய விடிய நடந்த சிபிஐ சோதனை.. செல்போனையும் பறித்துவிட்டனர்.. மணிஷ் சிசோடியா ஆதங்கம்
டெல்லி: மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் புகாரில் டெல்லி முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் விடிய விடிய 15 மணிநேரத்துக்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
Recommended Video
டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு, புதிய மதுபானக் கொள்கையை கடந்த ஆண்டு நவம்பர் 16-ம் தேதி அறிமுகப்படுத்தியது. அதன்படி, டெல்லி பல்வேறு மதுபான மண்டலங்களாக பிரிக்கப்பட்டன. மேலும், 800-க்கு மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் மதுபானங்களை விற்பனை செய்ய தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டது. மதுபானங்களை வீட்டுக்கே சென்று விநியோகம் செய்யவும் இதில் அனுமதி வழங்கப்பட்டது. பரிசோதனை முறையில் அமல்படுத்தப்பட்ட இந்த புதிய மதுபானக் கொள்கைக்கு டெல்லி மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதனால் கடந்த மாதம் (ஜூலை) 31-ம் தேதியுடன் இந்த நடைமுறைக்கு டெல்லி அரசு முற்றுப்புள்ளி வைத்தது.ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பழையபடி அரசு கடைகளின் மூலமே மது விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் ஆம் ஆத்மி அரசு பெரும் முறைகேட்டில் ஈடுபட்டதாக டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் பரிந்துரைத்தார். இந்த விவகாரம் ஆம் ஆத்மி அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே பெரும் மோதல் போக்கை உருவாக்கியது.
சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையை ஆயுதமாக பயன்படுத்தி ஆம் ஆத்மி அரசை மிரட்டுவதாக மத்திய அரசு மீது முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தியது. இதில், டெல்லி அரசின் கலால் கொள்கை அறிவிப்பில் விதிமீறல் இருப்பதாக கூறி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. அதில், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உட்பட 15 பேரின் பெயர்கள் இடம்பெற்றன. குறிப்பாக, மதுபான விற்பனை உரிமத்தை பெறுவதற்காக ஒரு மதுபான நிறுவனம் மணீஷ் சிசோடியாவுக்கு நெருக்கமான நிறுவனத்துக்கு ரூ.1 கோடியை வழங்கியதாகவும் சிபிஐ குற்றம்சாட்டியது.
இந்த சூழலில், இந்த முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று காலை அதிரடி சோதனை நடத்தினர். 15 மணிநேரத்துக்கும் மேலாக நள்ளிரவு வரை இந்த சோதனை நீடித்தது. அப்போது மணீஷ் சிசோடியா வீட்டில்தான் இருந்தார். அவர் வீட்டைவிட்டு வெளியே செல்ல சிபிஐ அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
இந்நிலையில், சிபிஐ ரெய்டு முடிந்ததும் தனது வீட்டை வெளியே வந்த மணீஷ் சிசோடியா அங்கிருந்த செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிபிஐ அதிகாரிகள் நேற்று காலை முதல் எனது வீட்டில் சோதனை நடத்தினர். அவர்களுக்கு நானும், எனது குடும்பத்தினரும் முழு ஒத்துழைப்பு அளித்தோம். எனது கணினி மற்றும் செல்போனை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், சில கோப்புகளையும் அவர் எடுத்துச் சென்றுள்ளனர். நான் எந்த தவறும் செய்யவில்லை. எனவே சிபிஐயை கண்டு நான் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. சிபிஐ அமைப்பை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் செய்து வரும் நற்பணிகளை தடுத்து நிறுத்த இதுபோன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இவ்வாறு மணீஷ் சிசோடியா கூறினார்.












Click it and Unblock the Notifications