பயப்படாமல் சீனா பற்றி பேசுங்க பார்க்கலாம்...பிரதமரை வம்புக்கு இழுக்கும் ராகுல்
டெல்லி : இன்று பேசும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பயப்படாமல் சீனாவை பற்றி பேசுங்கள் பார்க்கலாம் என பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி, தான் பதவியேற்றது முதல் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று ரேடியோ மூலம் மன் கி பாத் நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடையே பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாற்றி வருகிறார். அந்த வகையில் ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்றும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்.
இந்த ஆண்டின் முதல் மன் கி பாத் நிகழ்ச்சி இதுவாகும். அத்துடன் குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய பேரணியில் நடந்த கலவரத்திற்கு பின் நடக்கும் முதல் மன் கி பாத் நிகழ்ச்சி. நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பிரதமரின் இன்றைய பேச்சு மிக முக்கியமாக கவனிக்கப்படுகிறது.
இந்நிலையில் மன் கி பாத் நிகழ்ச்சி பற்றி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில், ரொம்ப பயப்பட வேண்டாம். மொத்த தைரியத்தை திரட்டி, இன்று சீனா பற்றி பேசுங்கள் என கருத்து பதிவிட்டுள்ளார்.
கடந்த மாத மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஒவ்வொரு நெருக்கடி காலத்திலும் ஒரு பாடத்தை கற்கிறோம். இந்தியா தற்போது புதிய திறன்களை வளர்த்துக் கொண்டுள்ளது. நமது நாட்டு உற்பத்திகள் உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. நமது உற்பத்தியாளர்களும், தொழில்துறை தலைவர்களும் நமது நாட்டு உற்பத்தியை உலக தரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டார்.