தமிழகத்தில் வறண்டுகிடந்த நாகநதி பற்றி உங்களுக்கு தெரியுமா? மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு
டெல்லி: இன்று ஆறுகளின் முக்கியத்துவம் குறித்து 81ஆவது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தில் வறண்டு கிடந்த நாக நதி அப்பகுதி பெண்களின் முன்னெடுப்பால் மீட்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாதங்களிலும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் வானொலியில் பேசி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பல்வேறு முக்கிய அறிவிப்புகள், தகவல்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

மன் கி பாத்
அதன்படி செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். இன்று உலக ஆறுகள் தினம் கொண்டாடப்படும் நிலையில், ஆறுகளின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் மோடி இன்றை மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார். ஒவ்வொரு சொட்டு நீரையும் மதித்து, மாசுபாட்டிற்கு எதிராகப் போராட வேண்டும் என்று தெரிவித்த பிரதமர் மோடி, ஆறுகளைப் போற்றும் வகையில் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் ஒரு முறை நதி திருவிழாவை நாம் கொண்டாட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கமண்டல நாகநதி
ஆண்டு முழுவதும் நமக்கு நல்ல சுத்தமான நீரைத் தன்னலமின்றி அளிக்கும் நதிகளை நாம் கொண்டாட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் உள்ள நதிகள் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, "தமிழகத்தில் கமண்டல நாகநதி வறண்டு போனது, இருப்பினும் அப்பகுதி பெண்கள் எடுத்த முன்னெடுப்பால் மூலம் அந்த நதி மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதியுள்ள பல ஆயிரம் மக்கள் பயன் பெற்றுள்ளனர்.

தண்ணீர் பஞ்சம்
தமிழக சகோதர, சகோதரிகளின் முயற்சியைப் போன்று இந்தியா முழுவதும் பல்வேறு நதிகளை மீட்டெடுக்கப் பலரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களிலும் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது. தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.

கங்கையை போற்றுவோம் திட்டம்
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "நான் பெற்ற பரிசுப் பொருட்கள் சிறப்பு இ- ஏலம் மூலம் கிடைக்கும் வருவாய் 'நமாமி கங்கே' திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும். காதி பொருட்களை வாங்கி, காந்தி ஜெயந்தியை உற்சாகமாகக் கொண்டாடுவோம். பல்வேறு நாட்கள் கொண்டாடப்பட்டாலும் நாம் மிக முக்கியமாகக் கொண்டாட வேண்டிய தினம் உலக நதி தினம். கூட்டு முயற்சியால் மட்டுமே ஆறுகளை மாசு இல்லாததாக மாற்ற முடியும். 'கங்கையைப் போற்றுவோம் திட்டம்' இன்று வெற்றிகரமான திட்டமாகத் திகழ்கிறது" என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications