பேஸ்புக் - பாஜக முறைகேட்டு புகார்.. மார்க் ஜுக்கர்பெர்க் உடனே விசாரிக்க வேண்டும்.. காங்கிரஸ் கடிதம்!
டெல்லி: இந்தியாவில் பாஜகவுடன் சேர்ந்து வெறுப்பை உமிழும் வகையில் செய்திகளை வெளியிட்ட மற்றும் ஒருசார்போடு செயல்பட்ட பேஸ்புக் நிர்வாகிகள் மீது அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
Recommended Video
இந்தியாவில் பேஸ்புக் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்றும், பாஜகவிற்கு சார்பாக செயல்படுகிறது என்றும் வைக்கப்பட்ட புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வன்முறைகளை தூண்டும் வகையில் பாஜகவினர் மூலம் போடப்படும் பேஸ்புக் போஸ்டுகளுக்கு எதிராக பேஸ்புக் நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னல்தான் இது தொடர்பான கட்டுரையை வெளியிட்டு, முதலில் புகாரை வைத்தது. வால் ஸ்டிரீட் ஜர்னல் எழுதி உள்ள ஆய்வு கட்டுரையில், பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் பாஜகவினர் செய்யும் வெறுப்பு பேச்சுக்களை நீக்குவது இல்லை, என்று குறிப்பிட்டது.
துரோகம்.. எங்கள் முதுகில் குத்திவிட்டனர்.. இஸ்ரேல் உடன் யு.ஏ.இ ஒப்பந்தம்.. பாலஸ்தீனம் பாய்ச்சல்!
என்ன சொன்னது
பாஜகவினர் செய்யும் போஸ்ட்களை கண்மூடித்தனமாக பேஸ்புக் ஆதரிக்கிறது. அதேபோல் பாஜக மட்டுமின்றி வேறு மூன்று இந்து அமைப்புகள், கட்சிகள் செய்யும் போஸ்டுகளையும் பேஸ்புக் அனுமதிக்கிறது. இந்தியாவின் பேஸ்புக் குழுவில் இருக்கும் அங்கி தாஸ் என்ற பெண்தான் இதற்கு தலைமை ஏற்று இருக்கிறார். இவர் பேஸ்புக்கில் பாஜகவினர் செய்யும் முறைகேடுகளை தடுக்க கூடாது என்று கட்டளை விதித்து இருக்கிறார், என்று அந்த கட்டுரை குறிப்பிட்டுள்ளது.
காங்கிரஸ் கடிதம்
இந்த நிலையில் வால் ஸ்டிரீட் ஜர்னல் கட்டுரை சர்ச்சையானதை தொடர்ந்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு காங்கிரஸ் கட்சி எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், பேஸ்புக் நிறுவனம் இது தொடர்பாக உடனே விசாரணை செய்ய வேண்டும். இந்திய பேஸ்புக்கில் வேலை பார்க்கும் எல்லோரையும் விசாரிக்க வேண்டும். அவர்கள் நடுநிலையின்றி, வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டதை விசாரிக்க வேண்டும்.
குறிப்பிட்ட நேரம்
குறிப்பிட்ட கால அவகாசம் விதித்து இந்த விசாரணையை நடத்த வேண்டும். ஒன்று அல்லது இரண்டு மாத அவகாசத்தில் இந்த விசாரணையை நடத்த வேண்டும். அதன்பின் அந்த விசாரணை குறித்த தகவல்களை பொதுவில் விட வேண்டும். 2014ல் இருந்து பேஸ்புக்கில் என்ன நடந்தது, எப்படி உண்மைகள் திரிக்கப்பட்டது என்று விசாரிக்க வேண்டும்.
விசாரணை செய்ய வேண்டும்
பேஸ்புக்கின் மூத்த நிர்வாகி அங்கி தாஸ் என்பவர் என்ன மாதிரியான முறைகேடுகளை செய்தார் என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும். மார்க் ஜுக்கர்பெர்க் நேரடியாக தலையிட்டு இதில் விசாரணைகளை நடத்த வேண்டும். உடனே இவர் மீது பேஸ்புக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து விரைவில் பேஸ்புக் உண்மையான விளக்கத்தை அளிக்க வேண்டும், என்று மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி
இந்த கடிதத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பகிர்ந்து இருக்கிறார். அதில், கஷ்டப்பட்டு, மக்கள் ரத்தம் சிந்தி வாங்கிய சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் இப்படி நாசம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொய்யான செய்திகளையும், வெறுப்பை உமிழும் செய்திகளையும் பேஸ்புக் பரப்புகிறது. இதை இந்தியர்கள் அனைவரும் கேள்வி கேட்க வேண்டும், என்று ராகுல் காந்தி குறிப்பிட்டு அந்த கடிதத்தை பகிர்ந்து உள்ளார்.