கேரளாவில் 18.. உபியில் 2.. ‘பாஜக-ஆர்எஸ்எஸ்க்கு எதிரான நூதன பயணம்’- ராகுல் மீது சிபிஎம் கொந்தளிப்பு
டெல்லி: ஒற்றுமை நடை பயணத்தை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி செல்வது ஒற்றுமை யாத்திரையா? சீட் யாத்திரையா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கேள்வி எழுப்பி இருக்கிறது.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒற்றுமையை ஏற்படுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரையை கடந்த புதன்கிழமை தொடங்கி இருக்கிறார் ராகுல் காந்தி.
கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் நடக்கத் தொடங்கிய ராகுல் காந்தி கடந்த சனிக்கிழமை கேரள எல்லையில் உள்ள முலகுமூடு கிராமத்திற்கு வந்தடைந்தார்.
இதுதான் யாத்திரையா? கேரளாவில் 18 நாள்! உபியில் மட்டும் வெறும் 2 நாள்! ராகுல் காந்தியை விளாசிய சிபிம்
பயண விபரம்
12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் காங்கிரஸ் கட்சியின் எந்த அடையாளத்தையும் பயன்படுத்த மாட்டோம் என்றும், தலைவர்களின் புகைப்படங்கள், கட்சியின் கொடி, கை சின்னம் போன்ற எதுவும் இடம்பெறாது என்றும் இது முழுக்க முழுக்க மக்கள் சந்திப்பு பயணம் மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டது.
150 நாட்கள்
380 பேர் கலந்துகொள்ள இருக்கும் இந்த பாத யாத்திரைக்கு மத்தியில் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையும் ராகுல் காந்தி செல்லும் வழியெங்கும் மக்களை சந்திக்க வருகிறார்.
கேரளாவில் நடைபயணம்
7 வது நாளான இன்று கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, அந்த மாநிலத்தில் மட்டும் 18 நாட்கள் நடைபயணம் செல்ல இருக்கிறார். ராகுல் காந்தியின் சொந்த மக்களவைத் தொகுதியான வயநாடு கேரளாவில் உள்ளது. தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற ஜனநாயக கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேரளாவில் ஆட்சியில் உள்ளது.
மார்க்சிஸ்ட் விமர்சனம்
கேரளாவில் காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. இந்த நிலையில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையை விமர்சித்து மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்டு பேஸ்புக் பக்கத்தில் கேலி சித்திரம் வெளியிட்டுள்ளது. அதில், "இது பாரத் ஜோடோவால் அல்லது சீட் ஜோடோவா? கேரளாவில் 18 நாட்கள். உத்தரப்பிரதேசத்தில் 2 நாட்கள். பாஜக - ஆர்எஸ்எஸ்க்கு எதிராக சண்டையிட நூதன முறை." என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.