தடுப்புகளை தாண்டி நுழைந்து... நாடாளுமன்றத்தில் 'இதை'கூட செய்வோம்... ராகேஷ் டிக்கைட் ஆவேசம்
டெல்லி: போராடும் விவசாயிகள் மீண்டும் தடுப்புகளைத் தாண்டி டெல்லிக்குள் நுழைந்து போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என்று விவசாயச் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்குத் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி. போராட்டம் தற்போது வரை ஓயவில்லை. விவசாய சட்டங்களை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் மகா கிசான் பஞ்சாயத்து என்ற நிகழ்ச்சியை நாடு முழுவதும் விவசாயிகள் நடத்தி வருகின்றனர். இதில் கலந்துகொள்ளும் விவசாயச் சங்க தலைவர்கள் விவசாய சட்டங்கள் குறித்துப் பேசிவருகின்றனர்.
பிளவுபடுத்த முயற்சி
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்த கிசான் மகாபஞ்சாயத்து நிகழ்ச்சியில் பேசிய விவசாயச் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட், "மத்திய அரசு முதலில் நம்மை மத ரீதியிலும், சாதி ரீதியிலும் பிரிக்க முயன்றார்கள். ஆனால், அதில் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் இப்போது வேறு வழிகள் குறித்துச் சிந்தித்து வருகிறார்கள்.
மீண்டும் டெல்லியில் போராட்டம்
எல்லையில் இருக்கும் தடுப்புகளைத் தாண்டி மீண்டும் டெல்லிக்கு நுழைந்து போராட்டம் நடத்த வேண்டிய தேவை ஏற்படலாம் தயாராக இருங்கள். விவசாயிகள் தங்கள் பயிர்களை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம் என்று பிரதமர் மோடி கூறுகிறார். பிரதமர் கூறியதைச் சரியானது என்று நாங்கள் நிரூபிக்கப் போகிறோம்.
நாடாளுமன்றத்தில் பயிர் விற்பனை
கலேக்டர் அலுவலகங்கள், மாநிலச் சட்டசபைகள், நாடாளுமன்ற கட்டடத்தில் எங்கள் பயிர்களை விற்பனை செய்யப்போகிறோம். நாடாளுமன்றத்தைவிட எங்கள் பயிர்களை விற்பனை செய்ய எது சிறந்த இடமாக இருக்கும் சொல்லுங்கள்" என்றும் அவர் பேசினார். முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன் கர்நாடகாவில் விவசாயிகள் மத்தியில் பேசிய அவர், பெங்களுவிலும் விவசாயிகள் ஒரு மாபெரும் பேரணியை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பாஜக எதிராகப் பிரசாரம்
மேலும், நடைபெறும் ஐந்து மாநில தேர்தல்களிலும் பாஜகவுக்கு எதிராகப் பிரசாரம் செய்யவுள்ளதாக விவசாயச் சங்க தலைவர்கள் அறிவித்துள்ளனர். விவசாயிகளுக்கு விரோதமாக நடந்துகொள்ளும் பாஜகவை தோற்கடிக்க வலுவான ஒரு எதிர்க்கட்சிக்கு அனைைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர்கள் பிரசாரத்தில் பேசி வருகின்றனர், கடந்த வாரம் மேற்கு வங்கம் மாநிலத்தில் முதலில் பாஜகவுக்கு எதிராக பிரசாரத்தை விவசாயிகள் தொடங்கினர்.