மே மாதம் மிக மிக மோசம்..ஒரு மணி நேரத்திற்கு 165 பேர் கொரோனாவால் பலி.. 83 லட்சம் பேருக்கு வைரஸ் பரவல்
டெல்லி: இந்தியாவில் மே மாதம் மட்டும் சுமார் 1.03 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர், அதாவது ஒரு மணி நேரத்திற்கு 165 பேர் என்ற விகிதத்தில் உயிரிழப்புகள் இருந்துள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் என்பது 2ஆம் அலையில் மிக மோசமாக உள்ளது. கொரோனா பாதிப்பும் சரி உயிரிழப்பும் சரி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தது.
குறிப்பாக மே மாதம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் சென்றது. மே தொடக்கத்தில் தான் கொரோனா பரவல் அதிகபட்சமாக 4 லட்சம் வரை சென்றது. அதேபோல உயிரிழப்புகளும் நான்காயிரத்தைத் தாண்டியது.

ஒரு மணி நேரத்திற்கு 165 பேர் பலி
மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் மே மாதம் மட்டும் 1.03 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதாவது ஒரு மணி நேரத்திற்குச் சராசரியாக 165 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக கொரோனாவால் இந்தியாவில் 3.11 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 1.48 லட்சம் மரணங்கள், அதாவது 48%, ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பின்னர் ஏற்பட்டவையாகும்.

மே மாதம் மிக மோசம்
மே மாதம் கொரோனா உயிரிழப்புகள் மிக மோசமாக இருந்தது. மே மாதம் இந்தியாவில் சராசரியாக 3400 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதில் குறைந்தபட்சம் 13 நாட்களில் கொரோனா உயிரிழப்பு 4000 தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மே 19ஆம் தேதி கொரோனா உயிரிழப்புகள் 4529 வரை சென்றது. எந்த நாட்டிலும் தினசரி கொரோனா உயிரிழப்புகள் இந்தளவு மோசமாகச் சென்றதில்லை.

3 லட்சத்தைத் தாண்டிய கொரோனா உயிரிழப்புகள்
கடந்த திங்கள்கிழமை இந்தியாவில் பதிவான ஒட்டுமொத்த கொரோனா உயிரிழப்புகள் 3 லட்சத்தைத் தாண்டியது. இதன் மூலம் அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளுக்குப் பிறகு கொரோனாவால் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்களை இழந்த நாடாக இந்தியா மாறியுள்ளது. நாட்டில் முதல் ஒரு லட்சம் கொரோனா உயிரிழப்புகள் பதிவாக ஏழு மாதங்கள் ஆகின. ஆனால், கடைசி ஒரு லட்சம் உயிரிழப்புகள் வெறும் 27 நாட்களில் ஏற்பட்டது கொரோனாவின் தீவிர தன்மையை உணர்த்தும் வகையில் உள்ளன.

2 மாதங்களில் கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பை எடுத்துக்கொண்டாலும் மே மாதம் தான் மிக மோசமாக உள்ளது. ஒரே மாத்தில் 83 லட்சம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 64 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் ஒட்டுமொத்தமாக தற்போது வரை 2.71 கோடி பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதில் 55% கடைசி 2 மாதங்களில் பதிவானவை என்பது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி பணிகள்
தடுப்பூசி மட்டுமே கொரோனாவை ஒழிக்க ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 94.02 கோடி மக்கள் 18+ வயதுடைய, கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளத் தகுதியுடையவர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்களில் 15.71 கோடி(17%) பேருக்குத் தடுப்பூசியின் முதல் டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல 4.63% பேருக்குத் தடுப்பூசியின் 2 டோஸ்களும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 89.66 கோடி பேருக்கு (73.95%) தடுப்பூசியின் ஒரு டோஸ்கூட அளிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications