குழந்தைகள் சித்ரவதை விவகாரம்.. நித்தி வெளிநாடு சென்றதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இல்லை- மத்திய அரசு
டெல்லி: குழந்தைகளை சித்ரவதை செய்த விவகாரம் தொடர்பாக நித்தியானந்தா வெளிநாடு சென்றதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதே வேளையில் அவரை நாடு கடத்த வேண்டும் என எந்தவித கோரிக்கையும் எங்களுக்கு வரவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
பெங்களூரில் ஆசிரமம் எடுத்து நடத்தி வரும் நித்தியானந்தா தான் தியானத்தில் இருந்த நிலையில் சூரியன் உதயமாகாமல் இருக்க வைத்ததாக கூறி பல்வேறு பரபரப்புகளை ஏற்படுத்தியவர். இவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஆசிரமத்தை நடத்தி வருகிறார்.
இங்கு 4 குழந்தைகள் கடத்தி தங்க வைக்கப்பட்டு அவர்கள் சித்ரவதை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன.
இருவர் கைது
இதைய.டுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆசிரமத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர். அதில் அந்த 4 குழந்தைகளும் மீட்கப்பட்டனர். அப்போது நித்தியின் சீடர்கள் பிரன்பிரியா மற்றும் பிரியத்வா ஆகியோர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்கள் 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தப்படுகிறது. மீட்கப்பட்ட 4 பேரில் இரு குழந்தைகள் புகார்தாரான பெங்களூர் ஜனார்த்தன சர்மாவின் குழந்தைகள் ஆவர்.
வெளிநாட்டுக்கு
இதையடுத்து இருவரும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த நிலையில் குழந்தைகள் கடத்தல் குறித்து நித்தியானந்தாவிடம் விசாரணை நடத்த காவல் துறையினர் அவரை தேடினர். ஆனால் அவர் வெளிநாட்டுக்குத் தப்பி சென்றுவிட்டதாக தகவல் கிடைத்தது.
வீடியோ
அவர் மேற்கு இந்திய தீவுகளில் உள்ள டிரிடாட் அல்லது டுபாகோவுக்கு தப்பியதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து அவர் இந்தியா திரும்பியவுடன் கைது செய்யப்படும் என போலீஸ் தெரிவித்தது. இதையடுத்து தான் குழந்தைகள் கடத்தவில்லை என நித்தி ஒரு வீடியோவை வெளியிட்டார்.
நித்தி மறுப்பு
அதில் பேசிய நித்தியானந்தா, எனது ஆசிரமத்தில் குருகுலத்தில் பயிலும் மாணவர்களுடன் பெற்றோர்கள் எப்போது வேண்டுமானாலும் சந்தித்து பேச அவர்களுக்கு அனுமதி உள்ளது. குருகுலமும் புகார்தாரர் கூறியது போல் மூடி இருக்காது, திறந்தே இருக்கும்.
வெளியுறவுத் துறை
தற்போது நான் இமயமலையில் தங்கியுள்ளேன் என கூறியிருந்தார். இதனிடையே வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் நித்தியானந்தாவை மீட்க மத்திய அரசின் உதவியை குஜராத் போலீஸ் நாடியது. இந்த நிலையில் நித்தியானந்தா இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்றதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை என வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
தகவல் ஏதும் இல்லை
இதுகுறித்து வெளியுறவுத் துறை செயலாளர் ரவீஷ்குமார் கூறுகையில் நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பி சென்றதாக காவல் துறை மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து எந்த வித தகவலும் வரவில்லை. அப்படியே வெளிநாட்டில் உள்ள ஒருவரை நாடு கடத்த வேண்டுமானால் அவர் இருக்கும் இடமும் அவரது தகவல்களும் எங்களுக்கு தேவை. ஆனால் இது வரை அது போன்ற தகவல்கள் ஏதும் எங்களுக்கு கிடைக்கவில்லை. என கூறியிருந்தார்.