டெல்லியில் இறைச்சி விற்க தடை.. இது அரசியலமைப்பு விதிமீறல்.. விளாசிய திரிணாமுல் எம்பி மஹுவா
டெல்லி: நவராத்திரி விழாவையொட்டி டெல்லியில் இறைச்சி விற்பனை கூடாது என டெல்லி தெற்கு, கிழக்கு மேயர்கள் கூறியுள்ளனர். இதனை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்பி மஹுவா மொய்த்ரா எதிர்த்துள்ளார். ‛‛நான் விரும்பும் போது இறைச்சி உண்பதற்கும், கடைக்காரர் தனது வியாபாரத்தை நடத்துவதற்கும் அரசியலமைப்பு சட்டம் சுதந்திரம் அளிக்கிறது'' என கூறியுள்ளார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா 9 நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தென்இந்தியாவை காட்டிலும் வடஇந்திய மாநிலங்களில் இந்த விழா விசேஷமாக கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் தான் நவராத்தி நேரத்தில் இறைச்சி கடைகளை திறக்க கூடாது என டெல்லி தெற்கு, கிழக்கு மாநகராட்சி கூறியுள்ளது. இதுதொடர்பாக டெல்லி தெற்கு மேயர் முகேஷ் சூர்யன் கூறியதாவது:

இறைச்சி கடைகளை மூட வேண்டும்
துர்காதேவிக்கு உகந்த நாளான நவராத்திரி காலத்தில் மாநகராட்சி பகுதிக்குள் இறைச்சி கடைகளை மூட வேண்டும். இந்த 9 நாட்களும், பக்தர்கள் இறைச்சி, வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பல்வேறு புகார்களை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்படும். இறைச்சி விற்காவிட்டால் மக்கள் அதை சாப்பிடமாட்டார்கள்.

சுதந்திரத்தை மீறாது
தற்போதைய முடிவு என்பது டெல்லி மக்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. திறந்தவெளியில் இறைச்சி வெட்டுவது என்பது விரதம் இருக்கும் மக்களை பாதிக்கிறது. இதுகுறித்த புகார் வந்தது. தற்போதைய உத்தரவு யாருடைய தனிப்பட்ட சுதந்திரத்தையும் மீறும் வகையில் இருக்காது'' என்றார்.

டெல்லி கிழக்கு மாநகராட்சி
இதேபோல் டெல்லி கிழக்கு மாநகராட்சி மேயர் ஷியாம் சுந்தர் அகர்வாலும் ஒன்பது நாள் விழாவையொட்டி இறைச்சி கடைகளை மூடும்படி கூறியுள்ளார். ஆனால் வடக்கு டெல்லி மாநகராட்சியில் இருந்து இதுபோன்று எந்த உத்தரவும் வரவில்லை. டெல்லியில் உள்ள 3 மாநகராட்சியிலும் பாஜக அதிகாரத்தில் உள்ள நிலையில் 2 மேயர்களிடம் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

திரிணாமுல் பெண் எம்பி எதிர்ப்பு
இந்நிலையில் இந்துக்களின் பண்டிகையான நவராத்திரிக்காக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இறைச்சி கடைகளுக்கு தடை விதிக்கப்படுவதை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹுவா மொய்த்ரா கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛நான் தெற்கு டெல்லியில் வசிக்கிறேன். அரசியலமைப்பு சட்டம் நான் விரும்பும் போது இறைச்சியை உண்பதற்கும், கடைக்காரர் தனது வியாபாரத்தை நடத்துவதற்கும் சுதந்திரம் அளிக்கிறது. Full stop " என கூறியுள்ளார். இவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications