வாட்ஸ்அப் மூலம் தூண்டில்.. சைபர் மோசடிகளுக்கு மத்திய அரசு எடுத்த அஸ்திரம்.. 83000 கணக்குகளுக்கு செக்
டெல்லி: டிஜிட்டல் மோசடிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. கார்டு மேல் 16 எண், ஓடிபி, ஹேக்கிங், வாட்ஸப்பில் லிங்கை கிளிக் செய்தால் மோசடி, டிஜிட்டல் அரெஸ்ட் என்று தினசரி நூதன முறையில் ஏராளமான மோசடியில் ஈடுபடுகிறார்கள். இவற்றில் பல மோசடிகளுக்கு வாட்ஸப் மூலம் தான் தூண்டில் போடப்படுகிறது. மக்களின் பாதுகாப்புக்காக 7.8 லட்சம் சிம் கார்டுகள், 83,000 வாட்ஸப் கணக்குகள், 3,000 ஸ்கைப் கணக்குகளை முடக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம், சைபர் க்ரைம் சம்மந்தப்பட்ட குற்றங்களுக்கு 1930 என்கிற உதவி எண் மூலமாக தொடர்பு கொள்ளலாம். மேலும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் மக்கள் தங்களுக்கு வரும் மோசடி அழைப்புகள் மற்றும் வாட்ஸப் மோசடிகள் குறித்து புகார் அளிக்கலாம்.

சைபர் மோசடி
இதுபோன்ற மோசடிகளை தவிர்க்க வாட்ஸப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றை இயக்கும் மெட்டா நிறுவனம், தொலைதொடர்பு துறையுடன் இணைந்து விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகிறோம். இதன் மூலம் பயனாளர்களுக்கு மோசடி பற்றிய அழைப்பு வருவதற்கு முன்பே அவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்படுகிறது என்றனர்.
என்னதான் அரசு விழிப்புணர்வு செய்தாலும் சைபர் க்ரைம் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் இருக்கின்றன. சமீபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த தலைமை செயலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவருக்கு, குடிநீர் வாரியத்தின் பெயரில் ஒரு வாட்ஸப் மெசேஜ் வந்துள்ளது. அதைப் பயன்படுத்தி அவரிடம் இருந்து ரூ.1.85 லட்சம் அபகரித்துள்ளனர்.
பகீர் மோசடி
குடிநீர் வாரியத்தின் லோகோவுடன் அதிகாரபூர்வ கணக்கை போலவே அவருக்கு மெசேஜ் அனுப்பியுள்ளனர். தண்ணீர் கட்டணத்திற்காக ரூ.13 முன் பணமாக செலுத்த சொல்லியுள்ளனர். இதற்காக அவர் லிங்கை க்ளிக் செய்தவுடன் செல்போன் ஹேக் ஆகிவிட்டது. உடனடியாக அவரின் வங்கிக் கணக்கில் இருந்து அடுத்தடுத்து 10 பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.
அந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுபோன்ற மோசடிகளுக்கு பெரும்பாலும் அரசின் பெயரை பயன்படுத்துகிறார்கள். அப்போதுதான் மக்களுக்கு சந்தேகம் வராது. மேலும் கூரியர், வங்கி பெயர்களையும் பயன்படுத்துகின்றனர். அதிகாரபூர்வ கணக்கை போலவே முகப்பு படம் உள்ளிட்டவற்றை வைத்திருப்பார்கள்.
தப்பிப்பது எப்படி
பில் கட்ட வேண்டும், கணக்கை சரி பார்க்க வேண்டும், சேவையை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட காரணங்களை சொல்லி லிங்க் அனுப்புவார்கள். வெளிநாட்டு எண்களில் இருந்து அழைத்தும் ஆசையை தூண்டுவார்கள். இவர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதற்கு அரசு சில விழிப்புணர்வு பதிவையும் வெளியிட்டுள்ளது.
வாட்ஸப்பில் இதுபோன்ற மெசேஜ்களில் வரும் லிங்கை கிளிக் செய்ய கூடாது. கட்டணம் தொடர்பாக மெசேஜ் வந்தால் சம்மந்தப்பட்ட துறையில் அதைப்பற்றி நேரடியாக விசாரித்து உறுதி செய்த பிறகே தொடர வேண்டும். அழைப்பு, குறுஞ்செய்தி எதிலுமே ஓடிபி, கடவுச் சொல் உள்ளிட்ட வங்கி தொடர்பான எந்த தகவலையும் பகிர கூடாது.
CyberDost
1930 எண்ணுக்கு தொடர்பு கொண்டு உடனடியாக புகார் அளிக்கலாம். இதுதொடர்பாக வாட்ஸப் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட சமூகவலைதளத்திலேயே ரிப்போர்ட் செய்யலாம். இப்படி புகார் வந்த ஏராளமான கணக்குகளை முடக்கியுள்ளோம். இதுதொடர்பான விழிப்புணர்வு பதிவுகளை தெரிந்து கொள்ள, இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் CyberDost பக்கத்தை பின்தொடரலாம்.












Click it and Unblock the Notifications