மத்திய உள்துறை களமிறக்கிய கவசம்.. சைபர் மோசடிகளை தடுக்க புதிய யுக்தி.. தேசிய அளவில் தீவிர நடவடிக்கை
டெல்லி: முதலீட்டு மோசடிகள் மூலம் பொதுமக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுவதைத் தடுக்க, மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) சைபர் மோசடி நெட்வொர்க்குகளுக்கு எதிராக நாடு தழுவிய தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
டெல்லி மற்றும் மும்பையில் சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள், இத்தகைய மோசடிகளின் தீவிரத்தை வெளிப்படுத்துகின்றன. போலி வர்த்தக செயலிகள், டிஜிட்டல் அரெஸ்ட் போன்ற ஏமாற்று வேலைகள் மற்றும் போலியான முதலீடு தகவல்கள் மூலம் பல கோடி ரூபாய்க்கு மோசடிகள் அரங்கேறி வருகின்றன. இதற்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளது.

சமீபத்தில் டெல்லியில், சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ஆன்லைன் முதலீட்டு திட்டத்தில் ரூ. 31 லட்சம் இழந்தார். அதேபோல் மும்பையில், இரண்டு வெவ்வேறு மோசடி கும்பல்கள் மூலம் பெண்கள் முறையே ரூ. 20 கோடி மற்றும் ரூ. 7.87 கோடி இழந்தனர். இப்படி தொடர்ச்சியாக பல முறைகேடுகள், மோசடிகள் நாடு முழுக்க நடந்து வருகிறது. சமீபத்தில் டிஜிட்டல் முதலீடு மூலம் ரூ. 6.03 கோடி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ண குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், ஜார்க்கண்ட்-மும்பை சிண்டிகேட் ஒன்று 15,000-க்கும் மேற்பட்ட "மூல் கணக்குகள்" (mule accounts) மூலம் நாடு முழுவதும் மோசடி செய்துள்ளது தெரியவந்தது. வெறும் 145 வங்கிக் கணக்குகள் மூலம், போலியான நிறுவனங்களுடன் தொடர்புடைய ரூ. 3,200 கோடி புழக்கத்தில் இருப்பது கண்டறியப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) சைபர் மோசடிகளுக்கு எதிராக ஒரு "பூஜ்ய சகிப்புத்தன்மை" கொள்கையை அறிவித்துள்ளது. அதாவது இது போன்ற மோசடிகளை எந்த விதத்திலும் மன்னிக்க முடியாது என்று அறிவித்து உள்ளனர். இதற்காக மோசடி கும்பல்களைத் தடுக்கும் ஒரு பல அடுக்கு பாதுகாப்பு அமைப்பை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 2020 இல் நிறுவப்பட்ட தேசிய சைபர் க்ரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C), மாநில போலீசாருக்கு தடயவியல் கருவிகள் மற்றும் விசாரணை ஆகியவற்றில் உதவி வருகிறது.
தேசிய சைபர் க்ரைம் புகாரளிக்கும் போர்ட்டல்
தேசிய சைபர் க்ரைம் புகாரளிக்கும் போர்ட்டல் மூலம் 1.43 லட்சத்திற்கும் மேற்பட்ட FIRகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் 19 கோடி பயனர்களை இது சென்றடைந்துள்ளது. I4C இன் பரிந்துரையின் பேரில், 800-க்கும் மேற்பட்ட மொபைல் செயலிகள், 3,200 வலைத்தளங்கள், 6.69 லட்சம் சிம் கார்டுகள் மற்றும் 1.32 லட்சம் IMEI எண்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.
ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகளுடன் இணைந்து, MHA "மூல் கணக்குகளை" முடக்கி, மோசடிக்கு நிதி செல்லும் பாதைகளை அடைத்துள்ளது. 1930 ஹெல்ப்லைன், "சைபர் தோஸ்த்" விழிப்புணர்வு பிரச்சாரங்கள், காலர் ட்யூன்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம், மோசடிகளை கண்டறிந்து தவிர்க்க மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது.
சைபர்பிரைட் திட்டத்தின் கீழ் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் சைபர் தடயவியல் மற்றும் மோசடி விசாரணையில் பயிற்சி பெற்றுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்ற தடுப்பு திட்டத்தின் கீழ், ஆன்லைன் சுரண்டல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
மோசடி செய்பவர்கள் புதிய தந்திரங்களுடன் வருவதால், MHA இன் சைபர் பாதுகாப்பு அதே அளவு தகவமைப்பைக் கொண்ட பாதுகாப்பாக செயல்படுகிறது. மேம்பட்ட தொழில்நுட்பம், ஒருங்கிணைந்த காவல் மற்றும் வெகுஜன விழிப்புணர்வுடன், இந்தியாவின் டிஜிட்டல் மற்றும் நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்க ஒரு தீர்க்கமான போர் நடந்து வருகிறது.
சைபர் தொடர்பான எந்த கவலையாக இருந்தாலும், மத்திய உள்துறை அமைச்சகம் உங்களுக்கு உதவ தயாராக உள்ளது. சமீபத்திய விழிப்பூட்டல்கள், குறிப்புகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களைப் பற்றி அறிய, சைபர்தோஸ்த் பக்கங்களை (YouTube, Instagram, Facebook, X, WhatsApp and Dailyhunt) பின்தொடரலாம். சைபர்தோஸ்த் உடன் தொடர்பில் இருங்கள், எச்சரிக்கையாக இருங்கள், ஆன்லைனில் பாதுகாப்பாக இருங்கள்.












Click it and Unblock the Notifications