பீர் விலை எல்லாம் ஏற போகுது.. வளைகுடா போரால் வந்த ஆபத்து! ஆட்டம் காணும் இந்திய மதுபான சந்தை
டெல்லி: வளைகுடாவில் நடக்கும் போரும் ஹார்முஸில் நிலவும் குழப்பமும் உலகெங்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயரும் ஆபத்து உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இதனால் பீர் விலையும் ஏறும் ஆபத்து இருப்பது உங்களுக்குத் தெரியுமா.. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
மத்திய கிழக்கில் கடந்த ஒரு மாதமாகக் குழப்பம் நிலவி வருகிறது. அமெரிக்கா ஈரான் இடையேயான போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ள போதிலும், இன்னும் அங்கு முழுமையாக அமைதி திரும்பவில்லை. எப்போது வேண்டும் என்றாலும் மீண்டும் போர் வெடிக்கும் என்ற சூழலே இருக்கிறது. மேலும், ஹார்முஸை சுற்றிலும் குழப்பம் தொடர்கிறது.

பீர் விலை
இந்த போரால் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, நிலைமையை சாமாக்க இந்தியா உட்பட உலக நாடுகள் எமர்ஜென்சியை கையிருப்பைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. சில நாட்களில் நிலைமை முழுமையாகச் சீராகவில்லை என்றால் பல நாடுகளில் வரிசையாகப் பிரச்சினை வரும் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கிடையே இந்த போரால் பீருக்கும் பிரச்சினை வந்துள்ளது.
பீருக்கு கூட இனி கஷ்டப்படணுமா என்று என்ற கேள்வியே இப்போது நெட்டிசன்கள் இடையே எழுந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நீடித்து வரும் போர்தான். இந்தப் போர் உலக அரசியலை மட்டும் மாற்றவில்லை, இந்தியப் பீர் சந்தையையும் ஒரு நெருக்கடி நிலைக்குத் தள்ளியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரிய சிக்கல்
இது குறித்து இந்தியாவின் முன்னணி மதுபான நிறுவனமான யுனைடெட் புரூவரீஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விவேக் குப்தா எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். வளைகுடா போர் இந்திய பீர் சந்தையில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் விலையேற்றத்தால் மோசமான நிலையில் மதுபான நிறுவனங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசின் ஒப்புதல் இல்லாமல் விலையையும் ஏற்ற முடியாது என்பதால் இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வளைகுடா போரால் கச்சா எண்ணெய் விலை மட்டுமல்ல.. கண்ணாடி பாட்டில்கள், அலுமினியக் கேன்கள் மற்றும் மூலப்பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக, அலுமினியத் தட்டுப்பாட்டால் கேன் தயாரிப்பாளர்கள் உற்பத்தியைக் குறைத்துள்ளனர். "போர் இன்று நின்றால் கூட, இதன் தாக்கம் இன்னும் 6 மாதங்களுக்கு நீடிக்கும்" என்கிறார் விவேக் குப்தா. இதனால் பீர் உற்பத்திச் செலவு மட்டும் சுமார் 15% வரை அதிகரித்துள்ளதாம்.
தலைவலி
பீர் நிறுவனங்களுக்கு உள்ள மிகப் பெரிய தலைவலியே அரசின் கட்டுப்பாடுகள்தான். இந்தியாவில் 75% பீர் வணிகம் அரசின் எக்ஸைஸ் கொள்கைகளின் கீழ் தான் வருகிறது. எனவே, மூலப்பொருட்களின் விலை ஏறினாலும், முன்பே குறிப்பிட்டது போல அரசின் அனுமதியின்றி பீர் விலையை நிறுவனங்களால் உயர்த்த முடியாது. உதாரணமாக, தெலங்கானாவில் ஒரு கேஸ் பீருக்கு அரசு சுமார் ₹1,400 வரை வரியாக வசூலிக்கிறது. ஆனால், அதைத் தயாரிக்கும் நிறுவனத்திற்குக் கிடைப்பதோ வெறும் ₹330 தான். இந்தளவுக்கு லாபம் குறைவாக இருப்பதால் சிறிய மதுபான ஆலைகள் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன.
சலுகைகள்
இது ஒரு பக்கம் இருக்க.. பணவீக்கம் காரணமாக, இளைஞர்கள் மதுக் குடிக்கும் முறையும் மாறி வருகிறதாம். பெரிய பாட்டில்களை வாங்குவதைக் குறைத்துவிட்டு, சிறிய அளவிலான பீர் கேன்களை அதிகம் வாங்கத் தொடங்கியுள்ளனர். அதே சமயம், அலுமினிய விலை உயர்வால் கேன் தயாரிப்புச் செலவு அதிகரித்துள்ளதால், இந்தத் தேவையையும் ஈடுகட்ட முடியாமல் நிறுவனங்கள் தவிக்கின்றன.
இதைக் கருத்தில் கொண்டு பீர் கேன்கள் இறக்குமதி மற்றும் தரக்கட்டுப்பாட்டு விதிகளில் மத்திய அரசு சில சலுகைகளைக் கொடுத்துள்ளது. நிலைமையைச் சமாளிக்க இறக்குமதி செய்யப்பட்டும் பீர் கேன்களுக்கு பிஐஎஸ் சான்றிதழ் கட்டாயம் என்ற விதிக்கு வரும் அக்டோபர் 1ம் தேதி வரை (சுமார் 7 மாதங்கள்) மத்திய அரசு விலக்கு கொடுத்துள்ளது. இது நிறுவனங்களுக்குச் சற்று நிம்மதி அளித்தாலும், நீண்ட காலத் தீர்வாகாது என்கிறார்கள் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications