"கைது கூடாது!" பாஜக பிரமுகர் தஜிந்தர் பக்கா வழக்கில்.. நள்ளிரவில் பஞ்சாப் ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்ட பாஜக நிர்வாகி தஜிந்தர் பால் சிங் பக்கா தொடர்பான வழக்கில் பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்தவர் தஜிந்தர் பால் சிங் பக்கா. பாஜக மாநில செய்தித்தொடர்பாளரான இவர் டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவால் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.
குறிப்பாகக் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்துக்கு எதிரான அர்விந்த் கெஜ்ரிவாலின் கருத்தைக் காட்டமாக விமர்சித்து இருந்தார்.
முதல்வர் பஸ்ல போறது உலக மகா அதிசயம் இல்லையே! திமுக ஆட்சினாலே மின்தடை தானே! தஞ்சையில் பொங்கிய ஓபிஎஸ்
கைது
இந்த நிலையில், அவர் மதவெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், குற்ற உள்நோக்கத்தோடும் கருத்துக்களைத் தெரிவித்ததாகப் பஞ்சாபின் மொகாலி மாவட்ட சைபர் பிரிவு காவல்துறையிடம் புகாரளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக நேற்று பஞ்சாப் போலீஸ் டெல்லிக்கு சென்று பக்காவின் இல்லத்தில் அவரை கைது செய்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து பாஜக தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹரியானா போலீஸ்
ஆம் ஆத்மி அரசு கருத்துரிமைக்கு எதிராக நடந்துகொள்வதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இந்த நிலையில் தஜிந்தர் சிங் பக்காவை அழைத்துக்கொண்டு பஞ்சாப் மாநிலம் மொஹாலிக்கு பஞ்சாப் போலீசார் சென்றுகொண்டிருந்தனர். குருக்ஷேத்ரா நெடுஞ்சாலை அருகே சென்றுகொண்டிருந்த பஞ்சாப் போலீசாரின் காரை தடுத்து நிறுத்திய அரியானா மாநில போலீஸ், டெல்லி போலீசுக்கு தகவல் தெரிவித்தது.
கைதுக்கான காரணம்
இதையடுத்து அங்கு விரைந்த டெல்லி போலீசார், தஜிந்தர் சிங் பக்காவை மீட்டு டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். மேலும் அவரை கடத்திச் சென்றதாகப் பஞ்சாப் போலீசார் மீதே டெல்லி போலீஸ் வழக்கு ஒன்றையும் பதிவு செய்து இருக்கிறது. 5 முறை நோட்டீஸ் அனுப்பியும் பக்கா விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும் இதன் காரணமாகவே அவரை கைது செய்துள்ளதாகப் பஞ்சாப் போலீசார் தெரிவித்தனர். மேலும், அவர் மீது ஜாமீனில் வெளி வர முடியாத வகையில் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
புதிய மனு
இதனிடையே தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தஜிந்தர் பக்கா பஞ்சாப், ஹரியாணா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தனது மீதான நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம் என்றும் அரசியல் எஜமானர்களை திருப்திப்படுத்துவதே இந்த வழக்கின் முக்கிய நோக்கம் என்றும் கூறி இருந்தனர். தஜிந்தர் பக்கா தாக்கல் செய்த இந்த மனு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் நேற்று (மே 7) நள்ளிரவு விசாரணைக்கு வந்தது. இதில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வரும் மே 10 வரை அவரது கைதுக்குத் தடை விதித்தது.
நிம்மதி
நீதிபதி மேலும் கூறுகையில், "பாக்காவின் மனு இந்த விவகாரத்தின் முக்கிய வழக்குடன் இணைக்கப்பட்டுள்ளது, அந்த வழக்கு மே 10ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதுவரை, தஜிந்தர் பக்கா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது" என்று உத்தரவிட்டார். தஜிந்தர் சிங் பக்கா மீதான இரண்டாவது வழக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு என்பதால் அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பஞ்சாப் ஐகோர்ட் தீர்ப்பு நிம்மதி அளிப்பதாக அமைந்துள்ளது.