விவசாயிகள் கொலை வழக்கு: ஆஜராக வந்த மத்திய அமைச்சர் மகனுக்கு பாதுகாப்பு கொடுத்த போலீஸ் படை.. சர்ச்சை
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம் பூரில் தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வாகனத்தை மோதச் செய்து 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜஸ் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா இன்று லக்கிம்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகினார்.
அவருக்கு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
"மத்திய அமைச்சர் மகன் என்பதற்காக நீங்கள் சிறப்பு உரிமை வழங்குகிறீர்களா, வேறு ஒருவராக இருந்தால் இப்படித்தான் போலீசில் ஆஜராக வேண்டுமென்று கெஞ்சிக் கொண்டிருப்பீர்களா," என்று உச்சநீதிமன்றம் நேற்று உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தது. மத்திய அமைச்சர் மகன் என்பதற்காக சிறப்பு சலுகை கொடுக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பியிருந்தது.

காவல்துறை பாதுகாப்பு
இந்த நிலையில்தான், கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை சுற்றிலும் காவல்துறையினர் அணிவகுத்து பாதுகாப்புக்கு வந்ததை போல இன்று வந்திருந்த காட்சி உச்சநீதிமன்ற சந்தேகத்தை உறுதி செய்வது போல இருந்தது போல இருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மீடியாக்களை நெருங்க விடவில்லை
காவல் நிலையத்தில் குவிந்திருந்த காவல்துறையினர், மத்திய அமைச்சர் மகனிடம் மீடியாக்கள் கேள்வி கேட்க விடாமல் பார்த்துக் கொண்டனர். காவல் நிலைய பின்வாசல் வழியாக ஆஷிஷ் மிஸ்ராவை காவல்துறையினர் உள்ளே அழைத்துச் சென்றுவிட்டனர். இது காவல்துறையினரின் பணி கிடையாது. குற்றவாளியை கைது செய்வதுதான் அவர் பொறுப்பு. ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர் வரும்போது அவருக்கு பாதுகாப்பு கொடுத்ததோடு, மீடியாக்களை பக்கத்தில் விடவில்லை.

சாட்சிக்கான சம்மன்
மேலும், ஆஷிஷ் மிஷ்ராவிற்கு, சிஆர்பி 160 பிரிவின்கீழ் சம்மன் அனுப்பப்பட்டது. அதாவது சம்பவத்தின் சாட்சிக்குதான் இந்த பிரிவின் கீழ் சம்மன் அனுப்புவார்கள். ஆனால், மத்திய அமைச்சர் மகனை கொலை குற்றவாளியாக காவல்துறை கருதாமல் சாட்சியாக கருதி சம்மன் அனுப்பியுள்ளது என்று கூறப்படுகிறது.

விசாரணை எப்படி இருக்கும்
விவசாயிகள் மீதான தாக்குதலில் கொலை குற்றவாளிகள் பட்டியலில் இவரது பெயர் இருக்கிறது. ஆனால் காவல்துறையினர் சாட்சி என்ற வகையில் அவருக்கு சம்மன் அனுப்பி இருக்கிறார். எனவே அவரிடம் அடுத்தடுத்த நாட்களில் எந்த மாதிரி விசாரணையை காவல்துறை மேற்கொள்ளப் போகிறது என்பது தெரியவில்லை.

காவல்துறை பொறுப்பு
குற்றம் சாட்டப்பட்ட நபரின் தந்தை மத்திய உள்துறை இணை அமைச்சராக இருக்கிறார், அதாவது காவல் துறைக்கு பொறுப்பு வகிப்பவர். அப்படியிருக்கும்போது ஆஷிஷ் மிஸ்ராவிடம் விசாரணை எப்படி நடைபெறும் என்று சந்தேகம் எழுப்புகிறார்கள் எதிர்க்கட்சியினர். இன்று நடைபெற்ற இந்த சம்பவங்கள் தங்கள் சந்தேகங்களை உறுதி செய்வதாக இருப்பதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications