எகிறும் டென்ஷன்! ஜனாதிபதியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜெய்சங்கர் அவசர மீட்டிங்.. ஆலோசித்தது என்ன?
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து, இந்தியா முப்படைகளை தயார் நிலையில் வைத்துள்ளது. பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் இந்தியா ரத்து செய்துள்ளது. இத்தகைய பரபரப்பான சூழலில், ஜனாதிபதியை உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர். சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரில் நடந்த தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் காயம் அடைந்து அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு
பாகிஸ்தானிய ஆதரவு பயங்கரவாத அமைப்பு நடத்தியிருக்க கூடிய இந்த தாக்குதலால் இந்தியா கடும் கோபம் அடைந்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் அதற்கு உதவியர்கள் கற்பனையில் கூட நினைக்காத அளவுக்கு பதிலடி கொடுப்போம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கராவத முகாம்களை குறிவைத்து இந்தியா துல்லிய தாக்குதல் நடத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
இந்தியா பதிலடி நடவடிக்கை எடுத்தால் தாங்க முடியாது என்பதை உணர்ந்த பாகிஸ்தான் அலற தொடங்கியுள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. சிந்து நதி நீர் நிறுத்தப்பட்டால் பாகிஸ்தானின் 80 சதவீத விவசாயம் பாதிக்கப்படும். அது மட்டும் இன்றி பாகிஸ்தானின் பெரும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
போராக கருதப்படும் என பாகிஸ்தான் பேச்சு
இதனால் பாகிஸ்தான் கதற தொடங்கியுள்ளது. சிந்து நதி நீரை நிறுத்தினால், அது போராகவே கருதப்படும் என்று கூறியுள்ள பாகிஸ்தான், முழு பலத்தையும் காட்டுவோம் என்று கூறியுள்ளது. இன்று மாலை இந்தியா அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
இத்தகைய பரபரப்புக்கு நடுவே, ஜனாதிபதி திரவுபதி முர்முவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துள்ளனர். பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அமித்ஷா, ஜெய்சங்கர், திரவுபதி முர்முவுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனையின் போது காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதியிடம் இரு அமைச்சர்களும் எடுத்துரைத்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications