சுதந்திர தின விழா 2020.. கொரோனா முன்கள போராளிகள்தான் சிறப்பு விருந்தினர்கள்.. மத்திய அரசு அறிக்கை
டெல்லி: இந்திய சுதந்திர தினத்தன்று கொரோனா முன்கள வீரர்களையும் கொரோனாவிலிருந்து மீண்டவர்களையும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா நோய் தங்களது உயிருக்கு உலை வைக்கும் என தெரிந்தே மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், போலீஸார், தூய்மை பணியாளர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது, பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது, சுத்தப் பணியில் ஈடுபடுவது உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மீது விமானத்தில் பூக்களை தூவி, மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு மரியாதை செய்யப்பட்டது. இதை மத்திய அரசு ஏற்பாடு செய்தது. இந்த முறையும் சுதந்திர தினத்தை மிகவும் விமரிசையாக கொண்டாடுவோம்.
அது போல் மோடியும் ஒவ்வொரு முறையும் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது கொரோனா முன்கள வீரர்களை பாராட்டியும் அவர்களை மக்கள் மதிக்குமாறு கேட்டுக் கொள்வது வழக்கம். இந்த முறை இந்த முன்கள வீரர்களையும் கொரோனாவிலிருந்து மீண்டவர்களையும் சிறப்பு அழைப்பாளர்களாக ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள சுதந்திர தினத்திற்கு அழைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறுகையில், ஆண்டுதோறும் சுதந்திர தினத்தை ஆடம்பரமாகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகத்துடனும் கொண்டாடுவது வழக்கம்.இந்த முறையும் நாம் இந்த தினத்தை உற்சாகமாக கொண்டாடுவோம். கொரோனா பாதிப்பு பரவி வரும் நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தும்போது சமூக இடைவெளியை பின்பற்றுவதும், மாஸ்க் அணிவதும், சுத்தம் பேணி காப்பதும் அவசியம் ஆகும்.
அதே நேரத்தில் மிகப் பெரிய அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். வயதானவர்கள், குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.மத்திய சுகாதாரத் துறை மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவுக்கு சுகாதார பணியாளர்கள், கொரோனா போராளிகளை சிறப்பு அழைப்பினர்களாக அழைக்கப்பட உள்ளனர்.
அது போல் ஆளுநர் மாளிகை, துணை நிலை ஆளுநர் மாளிகைகளிலும் கொரோனா முன்கள போராளிகளை சிறப்பு விருந்தினர்களாக அழைக்க வேண்டும். மாநிலங்களில் சுய சார்பு இந்தியா திட்டத்தை (ஆத்ம நிர்பார் பாரத்) கருப்பொருளாக வைத்து நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications