டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் மீண்டும் நியமனம்.. தமிழ்நாடு அரசு உத்தரவு!
சென்னை: தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். மூன்றாவது முறையாக மீண்டும் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார் ஏ.கே.எஸ். விஜயன்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த 2021 மே மாதம் பதவியேற்ற நிலையில், திமுக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கடந்த 2021 ஜூன் 14ஆம் தேதி நியமிக்கப்பட்டார். ஏ.கே.எஸ்.விஜயனின் பதவிக் காலம் ஓராண்டாக இருந்தது.

இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் ஏகேஎஸ் விஜயன், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார் ஏ.கே.எஸ்.விஜயன்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள சித்தமல்லியைச் சேர்ந்த ஏ.கே.எஸ்.விஜயன், 1999, 2004, 2009ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நாகை (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி ஆனவர். இவர், தற்போது திமுக மாநில விவசாய அணிச் செயலாளராக உள்ளார்.

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்பவர் மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பாலமாகச் செயல்படுபவர். முதலமைச்சரோ, அமைச்சர்களோ டெல்லிக்கு அரசு முறை பயணமாகச் செல்லும்போது அனைத்து ஏற்பாடுகளையும் அலுவல் ரீதியாக டெல்லி சிறப்பு பிரதிநிதியே மேற்கொள்வார். அந்த வகையில், இந்தப் பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், டெல்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநியாக ஏ.கே.எஸ்.விஜயன், மூன்றாவது முறையாக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை தமிழ்நாடு அரசின் தலைமை செயலர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications