பெகாசஸ்: இதையெல்லாம் நீங்கள் நம்புகிறீர்களா? அமெரிக்க பத்திரிகையை விமர்சித்த மத்திய அமைச்சர்
டெல்லி: நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையை எல்லாம் நீங்கள் நம்புகிறீர்களா? அவை கூலிக்காக வேலை செய்யும் மீடியா என மத்திய அமைச்சர் வி கே சிங் விமர்சனம் செய்துள்ளார். பெகாசஸ் குறித்த சர்ச்சை மீண்டும் எழுந்துள்ள நிலையில் இந்தியா இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையேயான உறவுகள் 30 ஆண்டுகள் நிறைவடைந்தது குறித்து பிரதமர் மோடி உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் பாதுகாப்புத் துறையின் ஒரு பிரிவான என்எஸ்ஓ நிறுவனத்தின் தயாரிப்பு பெகாசஸ் உளவு மென்பொருள். இந்த நிறுவனம் இந்த மென்பொருளை பல்வேறு நாடுகளின் அரசு அமைப்புகளுக்கு விற்பனை செய்து வருகிறது.
நாட்டுக்கு எதிராக சதி திட்டங்கள் தீட்டுபவர்களை கண்டறிய இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் உலகில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் செல்போன் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் குற்றம்சாட்டின.

மத்திய அமைச்சர்கள்
இந்தியாவிலும் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், தொழிலதிபர்கள் என 300-க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் இந்த பெகாசஸ் மென்பொருள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பெகாசஸ் பெரும் புயலை கிளப்பியது.

3 பேர் கொண்ட தனி விசாரணைக் குழு
இதுகுறித்து உச்சநீதிமன்றத்தால் 3 பேர் கொண்ட தனி விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பெகாசஸ் குறித்து புதியதொரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. இதனால் இந்த விவகாரம் இந்தியாவில் மீண்டும் வெடித்துள்ளது. உலகின் அதி சக்திவாய்ந்த சைபர் ஆயுதத்துக்கான போர் என்ற தலைப்பில் அந்த கட்டுரை வெளியாகியுள்ளது.

இந்திய அரசு
அதில் இஸ்ரேல் உடனான இரண்டு பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு கடந்த 2017ஆம் ஆண்டு பெகாசஸ் மென் பொருளை வாங்கியது என அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2017ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு வந்த பிறகு இரு நாடுகளுக்கிடையே நல்லுறவு வலுப்பெற்றதாகவும் அந்த கட்டுரை குறிப்பிடுகிறது.

எதிர்க்கட்சிகள் கண்டனம்
மத்திய பட்ஜெட் கூட்டத் தொடருக்காக நாடாளுமன்றம் கூடும் நிலையில் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள இந்த கட்டுரையால் மீண்டும் பெகாசஸ் சர்ச்சையை ஏற்படுத்தும் என தெரிகிறது. இந்திய மக்களின் வரிப் பணத்தை இந்தியர்களை கண்காணிக்க மத்திய அரசு பயன்படுத்தியுள்ளது என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

கடும் விமர்சனம்
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கட்டுரைக்கு இதுவரை எந்த வித பதிலையும் மத்திய அரசு தெரிவிக்காத நிலையில் மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே. சிங் டிவிட்டரில் பதில் அளித்துள்ளார். அதில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையை நீங்கள் நம்புகிறீர்களா? பிரபலமடைவதற்காக பணத்தை பெற்று செய்தி வெளியிடும் ஊடகம் (Supari Media) என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications