‛‛சிஏஏவில் மூக்கை நுழைக்காதீங்க’’.. கருத்து சொன்ன அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
டெல்லி: சிஏஏ அமலாக்கம் குறித்து கவலை கொண்டிருப்பதாக அமெரிக்கா கூறியிருந்த நிலையில், சிஏஏ இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், எனவே உலக நாடுகளின் கவலை தேவையற்றது என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது.
இந்தியாவில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் வெளிநாட்டவர்க்கு கடந்த காலங்களில் குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது. அதில் திருத்தம் செய்து, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிக்கள், கிருத்துவர்கள் ஆகியோர் இந்நாட்டிற்கு வந்து குறைந்தது 6 ஆண்டுகள் வாழ்ந்தாலே அவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் வகையில் புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய பாஜக அரசு அமல்படுத்தியுள்ளது.

இசுலாமியர்களை மட்டும் திட்டமிட்டுப் புறந்தள்ளிவிட்டு மற்றவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதன் மூலம் இந்நாட்டின் அடித்தளமான மதச்சார்பின்மைக் கோட்பாடே முற்றுமுழுதாக துடைத்தெறியப்படுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
எனவே இச்சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. டெல்லி பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா இஸ்லாமியா, அசாம் அனைத்து மாணவர்கள் கூட்டமைப்பு என மாணவர்கள் தீவிரமாக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அதேபோல எதிர்க்கட்சிகளின் முதலமைச்சர்களான மு.க.ஸ்டாலின், பிரனாயி விஜயன், மமதா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தங்கள் மாநிலங்களில் சிஏஏ-வை அமல்படுத்த மாட்டோம் என்று கூறியுள்ளனர்.
அதேபோல, இந்தியாவில் சிஏஏ அமல்படுத்தப்பட்டிருப்பது கவலையளிப்பதாக அமெரிக்கா கருத்து தெரிவித்திருந்தது. இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், "இந்தியாவில் சிஏஏ அமல்படுத்தப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. சிஏஏ அமல்படுத்தப்படுவதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மத சுதந்திரம், அனைத்து மதத்தினரும் சமமாக நடத்தப்படுவது அடிப்படை ஜனநாயக கோட்பாடுகளாகும்" என்றும் கூறியிருந்தார்.
அதேபோல பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் சஹ்ரா பலோச் கூறுகையில், "சிஏஏ சட்டம் பாரபட்சமாக இருக்கிறது. பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சிறுபான்மையினர் வெறியேறுவதற்கு அவர்கள் துன்புறுத்தப்படுவதுதான் காரணம் என்று இந்தியா கூறியுள்ளது. உன்மையில் இந்தியாவில்தான் சிறுபான்மையினர் ஓரம்கட்டப்படுகின்றனர்" என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலளித்திருக்கிறது. இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "சிஏஏ உள்நாட்டு விவகாரம். இந்த சட்டம் மனிதாபிமான உரிமைகளை ஆதரிக்கிறது. அகதிகள் குறித்து இந்த சட்டம் பேசுகிறது. அதேநேரம், அவர்களுக்கான கண்ணியத்தையும் வழங்குகிறது.
சிஏஏ குறித்து மற்ற நாடுகளின் கருத்துக்கள் தேவையற்றவை மற்றும் தவறானவை. இந்திய அரசியலமைப்பு, அதன் குடிமக்கள் அனைவருக்கும் மத சுதந்திரத்தை உறுதி செய்கிறது. எனவே சிறுபான்மையினர் குறித்து அச்சப்பட தேவையில்லை. அகதிகள் துன்பத்தில் இருக்கிறார்கள். அதனை போக்க எடுக்கப்படும் முயற்சிகளை வாக்கு வங்கி அரசியல் என்று பேசக்கூடாது. இந்தியாவின் நலன் விரும்பிகள், நட்பு நாடுகள் சிஏஏ-வை ஆதரிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications