விவசாயிகள் பிரச்சினை குறித்து உண்மை தெரியாம பேசாதீங்க...வெளியுறவுத்துறை கண்டனம்...யாருக்கு தெரியுமா?
டெல்லி: இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், அமெரிக்க பாப் பாடகி ரிஹானா ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.
இவர்களின் கருத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற விஷயங்களில் கருத்து தெரிவிப்பதற்கு முன்பு உண்மைகளை அறிந்து கொள்ளும்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அவர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

குடியரசு தின அசம்பாவிதம்
டெல்லியில் குடியரசு தினம் அன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி திசை மாறியது. போலீசார் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினார்கள். டெல்லியே பரபரப்பானது. டெல்லியின் பல்வேறு எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆதரவு குரல் வருகிறது.

கிரேட்டா தன்பெர்க், ரிஹானா ஆதரவு
இதற்கிடையே பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சுவீடன் நாட்டைச் சேர்ந்த 17 வயது இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ''இந்தியாவில் போராடி வரும் விவசாயிகளுடன் நாங்கள் இணைந்து நிற்கிறோம்" என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதேபோல் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா, தனது டுவிட்டர் பக்கத்தில், டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக வெளியான செய்தி ஒன்றை பகிர்ந்து "இது குறித்து ஏன் நாம் பேசவில்லை?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வெளியுறவுத்துறை கடும் கண்டனம்
இந்த நிலையில் இவர்களின் கருத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- இதுபோன்ற விஷயங்களில் கருத்து தெரிவிக்க விரைந்து செல்வதற்கு முன்பு உண்மைகளை அறிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம், மேலும் இந்த பிரச்சினைகள் குறித்து சரியான புரிதல் மேற்கொள்ளப்பட வேண்டும். பிரபலங்கள் மற்றும் பிறரால் பரபரப்பான சமூக ஊடக ஹேஷ்டேக்குகள் மற்றும் கருத்துகளானது துல்லியமானதாகவோ அல்லது பொறுப்பாகவோ இல்லை.

இந்தியாவுக்கு எதிராக செயல்படுகின்றனர்
வேளாண் சட்டங்கள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்களுக்குப் பிறகே நிறைவேற்றப்பட்டன. மிகச்சிறிய அளவிலான விவசாயிகளே இதை எதிர்க்கிறார்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இந்திய அரசு அவர்களின் பிரதிநிதிகளுடன் தொடர் பேச்சுவார்த்தைகளைத் நடத்தி வருகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூட பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை வேளாண் சட்டங்கள் நிறுத்தப்படும் என்று கூறியுள்ளார். ஆனால், சிலர் தவறான உள்நோக்கத்துடன் இந்தப் போராட்டங்களின் மீது தாக்கம் செலுத்தவும், அவர்களை திசைதிருப்பவும் முயல்கின்றனர். இவர்கள் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச ஆதரவை திரட்டி வருவது துரதிருஷ்டவசமானது. இதுபோன்ற நபர்களால் தூண்டப்பட்டு அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது. இது இந்தியாவிற்கு எல்லா இடங்களிலும் நாகரிக சமுதாயத்திற்கும் மிகவும் கவலை அளிக்கிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications