தொடரும் போர்! உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி.. இந்தியா அறிவிப்பு
டெல்லி: போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டிற்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி பொருட்களை அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த வியாழக்கிழமை போரை ஆரம்பித்தது. இது போர் 5ஆவது நாளாக இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இதனிடையே உக்ரைன் விவகாரம் தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அங்குள்ள இந்திய மாணவர்களைப் பாதுகாப்பாகவும் விரைவாகவும் மீட்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக நடைபெறும் 3ஆவது ஆலோசனைக் கூட்டம் இதுவாகும். பிரதமர் மோடி இந்த விவகாரத்திற்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதையே இது காட்டுவதாக மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டிற்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி பொருட்களை அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட ஆறாவது விமானம், தாயகம் திரும்பி உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இது குறித்து வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கூறுகையில், "உக்ரைன் தூதரின் கோரிக்கையைத் தொடர்ந்து, மனிதாபிமான அடிப்படையில் மருந்துகள் உள்ளிட்ட அடிப்படை பொருட்களை உக்ரைனுக்கு இந்தியா அனுப்பும்" என்று தெரிவித்தார்.
அதேநேரம் இந்த உதவிகள் எப்போது உக்ரைன் நாட்டிற்கு அனுப்பப்படும் என்பது குறித்த தகவல்களை மத்திய அரசு வெளியிடவில்லை. முன்னதாக மருந்துகள் உள்ளிட்ட அடிப்படை பொருட்கள் அவசரமாகத் தேவை என்று உக்ரைன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications