'மிஷன் உத்தர பிரதேசம் '..சட்டசபை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க.. புதிய ஆயுதத்தை கையில் எடுத்த விவசாயிகள்
டெல்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக 6 மாதங்களாகப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், அடுத்தாண்டு நடைபெறும் உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க "மிஷன் உத்தரப் பிரதேசம்" என்ற பிரசாரத்தைத் தொடங்குவதாக அறிவித்துள்ளனர்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகக் கடந்த ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடங்கினர்.
டெல்லி எல்லைகளில் 6 மாதங்களைக் கடந்தும் இந்தப் போராட்டம் தொடர்கிறது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடைய இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை
பாஜகவுக்கு எதிர்ப்பு
விவசாய சட்டங்களுக்கு எதிராகவும் ஆளும் பாஜக அரசுக்கு எதிராகவும் விவசாயிகள் கிஷான் மகாபஞ்சாயத்து என்ற நிகழ்ச்சியும் நடத்தி வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலத்திலும் இந்தப் போராட்டத்திற்குப் பரவலாக ஆதரவு உள்ளது. இந்தப் புதிய சட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விளக்க, கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் உத்தரப் பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்குச் சென்றார். அங்குப் பொதுமக்கள் அங்கு அவரை பேசவிடாமல் வெளியேற்றினர்.
விவசாயிகளுக்கு ஆதரவு
இது அங்கு ஒரு இடத்தில் மட்டும் நடைபெற்ற சம்பவம் இல்லை. உத்தரப் பிரதேச பெரும்பாலான பகுதிகளில் பரவலாக இதே நிலை தான். அதேநேரம் விவசாயச் சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கைட்டிற்கான ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் குடியரசு தின விழா டிராக்டர் பேரணியில் செங்கோட்டையில் திடீர் வன்முறை ஏற்பட்டது. அப்போது உத்தரப் பிரதேசத்தில் காசிப்பூரில் உள்ள போராட்ட களத்தில் ராகேஷ் டிக்கைட் கண்ணீருடன் உணர்ச்சிகரமாகப் பேட்டி ஒன்றை அளித்தார். அந்தப் பேட்டி மேற்கு உத்தரப் பிரதேசத்தில் இருந்து லட்சக் கணக்கான மக்களைப் போராட்ட களம் நோக்கி ஈர்த்தது.
மிஷன் உத்தரப் பிரதேசம்
மறுபுறம் கொரோனா பரவலை முதல்வர் யோகி ஆதித்யநாத் கையாண்ட விதத்திலும் மக்களுக்குத் திருப்தி இல்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, கிழக்கு உத்தரப் பிரதேச மக்கள் இதனால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் தான் விவசாயச் சங்கம் சார்பில் "Defeat BJP: Mission UP" என்ற பிரசாரம் அறிவித்துள்ளது.
தேர்தல்களில் பிரசாரம்
வரும் உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராகப் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். இது உத்தரப் பிரதேச தேர்தல் தவிர ஹிமச்சல பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் மாநிலச் சட்டசபைத் தேர்தல்களிலும் பாஜகவுக்கு எதிராகப் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக விவசாயச் சங்கம் அறிவித்துள்ளது. முன்னதாக, மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய ஐந்து மாநில தேர்தல் சமயத்திலும் பாஜகவுக்கு எதிராக விவசாயிகள் பிரசாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
பாஜகவுக்கு எதிராகப் பிரசாரம்
இது குறித்து விவசாய சங்கத்தினர் கூறுகையில், "பாஜகவுக்கு விவசாயிகள் குறித்து கவலை இல்லை. அவர்களுக்குத் தேர்தல் குறித்தும் வாக்குகள் குறித்தும் மட்டுமே கவலை. இதன் காரணமாகத் தான் நாங்கள் தேர்தல்களில் பாஜகவுக்கு எதிராகப் பிரசாரம் செய்ய முடிவெடுத்துள்ளோம். நாங்கள் தேர்தல்களில் போட்டியிட மாட்டோம். அதேபோல ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய மாட்டோம். பாஜகவை வீழ்த்தக்கூடிய வலிமையான ஒரு எதிர்க்கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே எங்கள் பிரசாரமாக இருக்கும்" என்றார்.
உள்ளாட்சித் தேர்தல்
கொரோனா பரவல் காரணமாக தற்போது பிரசாரத்தைத் தொடங்கவில்லை என்றும் கொரோனா பரவல் குறைந்ததும் பாஜகவுக்கு எதிராகப் பிரசாரம் தொடங்கப்படும் என்றும் விவசாயச் சங்கங்கள் தெரிவித்தன. மேலும், உத்தரப் பிரதேச மக்களே பாஜகவை நிராகரிக்கத் தொடங்கிவிட்டனர் என்றும் சமீபத்தில் நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அதற்குச் சாட்சி என்றும் தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தை
இது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும், இரு தரப்பினருக்கு இடையே உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை அப்படியே நிறுத்தப்பட்டது. இந்நிலையில், பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குமாறு மத்திய அரசிடம் விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.