மோடி அரசால் அரேபியர்களுக்கு எதிராக நிற்க முடியாது.. பாஜகவை சீண்டும் சு. சாமி.. சுளீர் விமர்சனம்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அரசு அரேபியர்களை எதிர்த்து நிற்காது என வரலாற்றை கிளறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி விமர்சனம் செய்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி விவாதத்தின் போது இஸ்லாமிய இறை தூதர் நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்கள், முஸ்லிம் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகரில் வன்முறையும் வெடித்தது.

முஸ்லிம் நாடுகள் கடும் எதிர்ப்பு
இதற்கிடையே நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துகளை கூறிய நுபுர்சர்மாவுக்கு உலகம் முழுவதும் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக முஸ்லிம் நாடுகள் இந்தியாவுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்தன. இதையடுத்து நுபுர் சர்மா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் நுபுர் சர்மா சர்ச்சைக்கு கத்தார், ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா, ஓமன், பக்ரைன், ஜோர்டான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. கத்தார் உள்ளிட்ட சில நாடுகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

இந்தியா விளக்கம்
இந்த நாடுகளுக்கு இந்தியா தரப்பில் பதிலும் கூறப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் குறித்து பேசிய நபர் கலகத்தை உண்டு பண்ணும் நபர் என இந்திய வெளியுறவுத்துறை கூறி இருந்தது. மேலும், பாஜக தரபரபிலும் அறிக்கை வளெியிடப்பட்டு இருந்தது. அதில், பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கிறது என கூறப்பட்டு இருந்தது. இருப்பினும் இந்த பிரச்சனை முடிந்தபாடில்லை.

சுப்பிரமணியசாமி கருத்து
இந்நிலையில் தான் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். அதில், பிரதமர் நரேந்திர மோடியின் அரசை அவர் விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி அரசால் அரேபியர்களுக்கு எதிராக நிற்க முடியாது. இந்திய அரசு இஸ்ரேலுக்கு எதிராகவும், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நெருக்கடியின்போது தாலிபான்களுடன் சேர்த்து வைக்க கத்தாரிடம் இந்திய அரசு கெஞ்சியது. பணமோசடிக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள துபாய் தான் பிசிசிஐயை கட்டுப்படுத்துகிறது. இன்னும் வேண்டுமா? என குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

காரணம் என்ன?
அதாவது தாலிபான்கள் தலைமை அலுவலகம் கத்தார் நாட்டின் தோஹா நகரில் அமைந்துள்ளது. ஆப்கனை 2021 ஆகஸ்டில் தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மிட்டல் தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தில் வைத்து தாலிபான் அரசியல் பிரிவு தலைமையக தலைவரான ஷெர் முகமது அப்பாஸ் ஸ்டானெக்ஸாய் என்பவருடன் பேசினார். ஆப்கானில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் துபாய்க்கு மாற்றப்படுகிறது. இந்த விவகாரங்களை குறிப்பிட்டு தான் சுப்பிரமணியசாமி பிரதமர் நரேந்திர மோடியின் அரசை விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications