பிரதமர் மோடி பிறப்பால் ஒரு இந்தியர்.. குடியுரிமை சான்றிதழை காட்ட தேவையில்லை.. ஆர்டிஐ தகவல்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பிறப்பால் ஒரு இந்தியர்.. எனவே அவர் குடியுரிமைச் சான்றிதழ் எதையும் காட்டத் தேவையில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம் என்பது யாருக்கு பொருந்தும், யாருக்கு பொருந்தாது என்பது குறித்து மிகப்பெரிய குழப்பம் உருவாகி உள்ளது. அதாவது பிறப்பு சான்றிதழை அடிப்படையாக வைத்து அரசு என்ஆர்சி கொண்டுவரப்போவதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
அஸ்ஸாமில் கொண்டுவரப்பட்ட என்ஆர்சியில் பிறப்பு சான்றிழே முக்கிய ஆவணமாக பார்க்கப்பட்டது. அத்துடன் தற்போது ஒருவர் பிறந்திருந்தாலும் அவரது தந்தை அல்லது அவரது முன்னோர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சிஏஏ.. மேகாலயாவிலும் வெடித்த வன்முறை.. ஊரடங்கு உத்தரவு.. மொபைல் சேவை முடக்கம்
என்ஆர்சி குறித்து
இதேபோல் நாடு முழுவதும் என்ஆர்சி என்ற ஒன்று கொண்டுவரப்படும் என்றும், அதற்காகவே குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அது குறிப்பிட்ட சமூக மக்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்தப்படும் என்கிற அச்சமும் நிலவுகிறது. ஆனால் இதனை மத்திய அரசு ஆரம்பம் முதலே திட்டவட்டமாக மறுத்துவருகிறது. அஸ்ஸாம் வேறு மற்ற இந்தியாவின் பிற பகுதிகள் என்பது வேறு என்று கூறி வருகிறது.
பாதிப்பு வராது
இந்தியா முழுவதும் என்ஆர்சி கொண்டுவரும் திட்டம் அரசுக்கு இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு இறுதியில் தெரிவித்தார். அத்துடன் குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பு வராது என்றும் குடியுரிமை திருத்த சட்டம் என்பது அண்டை நாடுகளில் இருந்து அகதியாக வந்தவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் சட்டம் என்றும், யாருடையை குடியுரிமையையும் பறிக்கும் சட்டம் இல்லை என்றும் பிரதமர் மோடியே கூறினார்.
டெல்லி வன்முறை
இதற்கிடையே குடியுரிமை சட்டம் மற்றும் என்ஆர்சி குறித்த பெரிய அளவில் இந்தியா முழுவதுமே உள்ளது. அஸ்ஸாம் பாணியில் நடக்குமோ என்ற அச்சமே இதற்கு காரணம். இதனால் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது- குறிப்பாக டெல்லியில் நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. 42 பேர் வரை கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
குடியுரிமை சான்றிதழ்
இந்நிலையில் ஸ்ரீசுபாங்கர் சர்கர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் மோடியின் குடியுரிமைச் சான்றிதழை காண்பிக்குமாறு கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த பிரதமர் அலுவலகம் இந்தியக்கு குடியுரிமை சட்டம் 1955 இன் பிரிவு 3ன் படி பிறப்பால் பிரதமர் நரேந்திர மோடி இந்திய குடிமகன் என்றும், அவர் பிறப்பால் இந்தியர் என்ற அந்தஸ்தை பெறுவதால் அவருக்கு குடியுரிமை சான்றிழ் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.