எம்பியே ஆகாமல் நாடாளுமன்றம் வந்திருக்கோம்.. 2024ல் நரேந்திர மோடி தான் பிரதமர்..மதுரை ஆதினம் பூரிப்பு
டெல்லி: இதுவரை 14 பிரதமர் இருந்து இருக்கிறார்கள். ஒருத்தர் கூட எங்களை கூப்பிட்டது இல்லை. நாங்களும் வந்தது இல்லை. நாங்கள் எம்.பியே ஆகாமல், எந்த கட்சியிலும் நிற்காமல் நாடாளுமன்றம் வந்து இருக்கிறோம். ஆன்மீக வாதியை கூப்பிட்ட ஒரே பெருமைக்குரியவர் பிரதமர் மோடிதான் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு தமிழகத்தை சேர்ந்த ஆதினங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த அழைப்பை ஏற்று நாடாளுமன்ற திறப்பு விழாவிற்காக தமிழ்நாட்டில் இருந்து திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், மதுரை ஆதினம் உள்பட 20 ஆதீனங்கள் டெல்லி சென்றனர்.

அவர்கள் நேற்று மாலை பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து நினைவு பரிசுகளை வழங்கினர். இன்று நாடாளுமன்ற திறப்பு விழாவிலும் ஆதினங்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், டெல்லியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த மதுரை ஆதினம், வரும் 2024 ஆம் ஆண்டிலும் பிரதமராக நரேந்திர மோடிதான் வருவார் என்று கூறினார். மதுரை ஆதினம் இது தொடர்பாக கூறியதாவது:-
இதுவரை 14 பிரதமர் இருந்து இருக்கிறார்கள். ஒருத்தர் கூட எங்களை கூப்பிட்டது இல்லை. நாங்களும் வந்தது இல்லை. நாங்கள் எம்.பியே ஆகாமல், எந்த கட்சியிலும் நிற்காமல் நாடாளுமன்றம் வந்து இருக்கிறோம். ஆன்மீக வாதியை கூப்பிட்ட ஒரே பெருமைக்குரியவர் பிரதமர் மோடிதான். எங்களை எல்லாம் வரவழைத்து பெருமை படுத்தினார்கள். தேவாரம் பாடி செங்கோலை நிறுவியிருக்கிறார்கள்.
நானும் ஒரு செங்கோல் கொடுத்து இருக்கிறேன். தமிழர்களை பாதுகாத்ததற்காக கொடுத்து இருக்கிறேன். 2024 ஆம் ஆண்டிலும் மோடி பிரதமர் ஆகி நாட்டை வளப்படுத்த வேண்டும் என இறைவனை பிரார்த்தித்துக் கொண்டு வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவித்து கொள்கிறேன். அனைவரிடமும் பிரதமர் மோடி மரியாதையாக நடந்து கொண்டார். செங்கோல் கொடுப்பதில் தவறு இல்லை.
அந்த காலத்தில் ராஜ ராஜ சோழன் வைத்து இருந்தார். செங்கோல் ஆதினம் என்றே தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதினம் இருந்தார். இதுபோல அரசர்கள் வரும் செங்கோல் கொடுப்பது வழக்கம் தான் இதில் தவறு இல்லை. செங்கோல் மன்னராட்சியை குறிக்கிறது என்பதை ஏற்க முடியாது. தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்தது. தமிழ்நாட்டு ஆதீனங்களை அழைத்து பெருமைப்படுத்திய முதல் பிரதமர் மோடி தான்" என்றார்.












Click it and Unblock the Notifications