ஜூன் 4-க்குப் பின் மோடி பிரதமர் இல்லை-இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் எதிர்ப்பு புயல்- ராகுல் ஆவேசம்!
டெல்லி: நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் எதிர்ப்புப் புயல் வீசுவதால் ஜூன்
4-ந் தேதிக்குப் பின் மோடி பிரதமராக இருக்கவே மாட்டார் என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
18-வது லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு மற்றும் உ.பி.யின் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடுகிறார். ரேபரேலி தொகுதியில் மே 20-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

லோக்சபா தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடிதான் முன்னிறுத்தப்படுகிறார். ஆனால் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தவில்லை. அதேநேரத்தில் பாஜகவே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி விமர்சனங்களை செய்து வருகிறது.
இந்த பின்னணியில் தமது சமூக வலைதளப் பக்கங்களில் ராகுல் காந்தி பதிவிட்டிருப்பதாவது: 'பொய்களின் தொழிற்சாலை' பா.ஜ.க எவ்வளவுதான் ஆறுதல் சொல்லிக் கொண்டாலும் அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.
மீண்டும் சொல்கிறேன் - ஜூன் 4க்கு பிறகு நரேந்திர மோடி பிரதமராக முடியாது. இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் புயல் வீசுகிறது.
நாட்டில் 90% மக்களுக்கு எங்கும் பங்கு இல்லை. ஊடகங்கள் அம்பானியின் திருமணத்தை தொலைக்காட்சியில் காண்பிக்கும், பிரதமர் மோடியின் வீடியோவைக் காண்பிக்கும். ஆனால் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் வேலையற்ற இளைஞர்களின் குரல்களை ஒருபோதும் காட்ட மாட்டார்கள்.
ஏனெனில் ஊடக உரிமையாளர்கள் பட்டியலில் தலித், பழங்குடியினர் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரைக் கூட நீங்கள் காண முடியாது. இவ்வாறு ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications