பீகார் டூ நேபாளத்திற்கு ரயில்.. ரூபே பரிவர்த்தனை.. அசத்தல் திட்டங்களை துவக்கிவைத்த மோடி- ஷெர் பகதூர்
டெல்லி: இந்தியா - நேபாளம் இடையிலான ரயில்வே பாதை, நேபாளில் ரூபே பண பரிவர்த்தனை திட்டம் உள்ளிட்டவற்றை பிரதமர் நரேந்திர மோடி - நேபாளம் பிரதமர் செர் பகதூர் தேவ்பா தொடங்கி வைத்தனர்.
பிரதமர் நரேந்திர மோடியும் நேபாளம் பிரதமர் செர் பகதூர் தேவ்பாவும் கடந்த ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற ஐ.நா. பருவ நிலை மாற்றம் குறித்த கலந்தாய்வில் பங்கேற்றபோது சந்தித்துக் கொண்டனர்.
இதனை தொடர்ந்து வைப்ரண்ட் குஜராத் கலந்தாய்வில் பங்கேற்பதற்காக ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வர திட்டமிட்டார் நேபாளம் பிரதமர் செர் பகதூர் தேவ்பா.

பாஜக அலுவலகம் சென்ற நேபாளம் பிரதமர்
கொரோனா காரணமாக அந்த பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், நேற்று 3 நாள் பயணமாக தேவ்பா இந்தியா வந்தார். நேற்றைய தினம் பாஜக அலுவலகம் சென்ற அவர், தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார். பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரை சந்தித்த அவர் இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடினார்.

3 முக்கிய திட்டங்கள்
இன்று காலை அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் இருநாட்டு தலைவர்களும், இந்தியா - நேபாளம் தொடர்பான 3 முக்கிய திட்டங்களை ஒன்றாக தொடங்கி வைத்தனர்.
அதில் ஒன்று இந்திய அரசின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை திட்டமான ரூபேவை நேபாளில் அறிமுகப்படுத்துவது. அடுத்து இந்தியாவின் கடன் உதவியுடன் நேபாளின் சோலு பகுதியில் 132 கிலோ வாட் துணை மின்நிலையத்தையும், மின் இணைப்பு திட்டத்தையும் தொடங்கி வைப்பது. மற்றொன்று இந்தியா - நேபாளம் இடையே எல்லையில் ரயில் பாதை அமைப்பது.

பீகார் டூ நேபாளம் ரயில்பாதை
பீகாரின் ஜெயநகர் பகுதியையும் நேபாளத்தின் குர்தாவையும் இணைக்கும் இந்த ரயில்பாதை இந்தியாவின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதுதான் நேபாளத்தின் முதல் நவீன ரயில் சேவை எனக் கூறப்படுகிறது. இதற்காக அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு சோதனை ரயில்கள் 2020 ஆம் ஆண்டு இயக்கப்பட்டன.

ரூ.550 கோடி நிதி ஒதுக்கிய மத்திய அரசு
பீகாரின் ஜெயநகர் பகுதி நேபாளத்திலும் வெறும் 4 கிலோ மீட்டர் தொலைவிலேயே உள்ளது. இந்த ரயில் திட்டம் 68.7 கி.மீ தூர ஜெயநகர் - பிஜல்புரா - பர்திதாஸ் திட்டத்தின் ஒரு பகுதியாகும். நேபாளத்தில் அமைந்து இருக்கும் பிஜல்புரா பகுதி குர்தாவிலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது. இதற்காக ரூ.550 கோடியை இந்திய அரசு ஒதுக்கி இருக்கிறது.
Recommended Video

இந்த ரயிலில் செல்வது எப்படி?
இந்தியர்கள் இந்த ரயிலில் பயணித்து நேபாளம் சென்றுவர கட்டாயம் புகைப்படத்துடன் கூடிய அரசு அடையாள ஆவணத்தை கையில் வைத்திருக்க வேண்டும். நேபாளத்தின் முதல் அகல ரயில்பாதை திட்டமான இது செயல்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு வரை ஜெயநகர் ஜனக்பூர் இடையே மீட்டர் கேஜாக செயல்பட்டு வந்தது.












Click it and Unblock the Notifications