மாநாட்டுக்கு பணம் வந்தது எப்படி? தப்லீக் ஜமாத் தலைவர் மீது பாய்ந்தது பணமோசடி வழக்கு!
டெல்லி: டெல்லி நிஜாமுதீன் தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா முகமது சாத் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். ஏற்கனவே அவர் மீது டெல்லி காவல்துறை கொலை வழக்கை பதிவு செய்துள்ளார்கள்.
டெல்லி நிஜாமுதீன் மார்க்கஸில் நடத்திய மார்ச் மாத மாநாட்டில், பங்கேற்ற ஏராளமானோருக்கு கொரோனா வைரஸ் பாதித்த நிலையில் மவுலானா முகமது சாத் மீது கொலை வழக்கு பாய்ந்தது.
இந்தியாவில் 35 சதவீத கொரோனா பாதிப்புக்கு தப்லீக் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் தான் காரணம் என்று மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது. அத்துடன் அந்த மாநாட்டில் பங்கேற்ற 26,000 பேர் தனிமைப்படுத்திக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறியது .
இந்நிலையில் விசா விதிமுறைகளை மீறியதாக 1800 வெளிநாட்டு தப்லீக் ஜமாத் உறுப்பினர்களின் பாஸ்போர்ட்களை மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் முடக்கியது.
. இந்நிலையில் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டிற்கு சட்டவிரோதமாக பண பரிமாற்றம் நடந்திருக்குமா என்ற கோணத்தில் அமலாக்கத்துறையினர் விசாரணை தொடங்கி உள்ளனர். மவுலானா முகமது சாத் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.
தப்லீக் ஜமாத் தலைவர் சாத், தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதால் விசாரணைக்கு வரவில்லை. இந்நிலையில் தப்லீக் ஜமாத் அமைப்பு மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.