அச்சுறுத்தும் குரங்கு அம்மை.. சீக்கிரமே தடுப்பூசி.. அப்டேட் கொடுத்த சீரம் நிறுவன சிஇஓ
டெல்லி: ஆப்பிரிக்க நாடுகளை குரங்கு அம்மை நோய் அதிதீவிரமாக அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், குரங்கு அம்மைக்கு தடுப்பூசி தயாரிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக சீரம் இந்திய நிறுவனத்தின் சிஇஓ அதார் பூனவல்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று 2019 ஆம் ஆண்டு பரவ தொடங்கி நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவல் ஓய்ந்த நிலையில், தற்போது குரங்கு அம்மை நோய் பரவி வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. குரங்கு அம்மை பாதிப்பை உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய ஆப்பிரிக்காவில் குரங்கு அம்மை நோய் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை சுமார் 450க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 32 பரிசோதனை மையங்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
உடல் பலவீனம், வீங்கிய நிணநீர் முனைகள், தொண்டை புண், சொறி, காய்ச்சல், தசை வலி, முதுகு வலி ஆகியன குரங்கு அம்மையின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே உடலில் தென்பத் தொடங்கிவிடும். குறிப்பாக காய்ச்சல், தொண்டை புண், தலைவலி முதலிலேயே தென்படத் தொடங்கிவிடும்.

தொற்று பரவியவர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதன் மூலம் இந்நோய் பரவும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கர்ப்பிணிப் பெண்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு இந்த தொற்று தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இந்த நோய்த் தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அந்த நோயாளியை தனிமைப்படுத்த வேண்டும். தொற்றால் பாதிக்கப்பட்ட உடனே முறையான சிகிச்சை பெறுவதன் மூலம் 4 வாரங்களில் நோய் பாதிப்பிலிருந்து மீண்டு விட முடியும் என்று சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுநாள் வரை இந்தியாவில் குரங்கு அம்மை யாருக்கும் பரவவில்லை. இருப்பினும், வரும் நாட்களில் வெளிநாடுகளில் இருந்து வருவோர் மூலம் நாட்டுக்குள் குரங்கு அம்மை பரவும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை செயல் அதிகாரி அதார் பூனவல்லா, குரங்கு அம்மைக்கு விரைவில் தடுப்பூசியை கண்டுபிடிக்க முடியும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: குரங்கு அம்மை உலகளாவிய பொது சுகாதார நிலையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு ஆபத்தான நிலையில் இருக்கும் பத்து லட்சத்துக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்ற தடுப்பூசி தயாரிக்கும் பணியில் சீரம் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
சீரம் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ஓராண்டிற்குள் மேலும் பல புதுப்பிப்புகள், பாசிட்டிவான செய்திகள் பகிரப்படும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளனர். தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவின் வலிமையை சாதகமாக ஆராய வேண்டும் என்று எச்ஐவி, எஸ்டிடி ஆலோசகர் மருத்துவர் ஈஸ்வர் கிலாடா கூறியுள்ளார்.
மேலும், குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டால் அதற்கான பிரேத்யேகமான, சோதனையோ சிகிச்சையோ, மருந்துகளோ இல்லை. ஆனால், டெவிகோவிரோமேட் வெற்றிகரமாக முயற்சிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications