"2024இல் கூட மோடி தான் எங்க பிரதமர்!" அடித்து சொன்ன 53% பேர்.. பீகாருக்கு பின்னரும் குறையாத மவுசு
டெல்லி: பீகார் குழப்பத்திற்குப் பின்னரும் கூட, பிரதமர் மோடியின் செல்வாக்கு குறையவில்லை என்பதே புதிதாக வெளியாகியுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்த மகா விலாஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி ஆட்சியைக் கவிழ்த்தார்.
இதையடுத்து அங்கிருந்த சிவசேனா- காங்கிரஸ்- என்சிபி அரசு கவிழ்ந்தது. பாஜக உடன் கைகோர்த்து ஷிண்டே தரப்பினர் ஆட்சியை அமைத்தனர். ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர்.

அரசியல் குழப்பம்
இருப்பினும், மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்து 40 நாடுகளுக்குள் பீகார் அவர்கள் கைகளை விட்டுச் சென்றது. பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டார். அதற்குப் பதிலாகத் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் உடன் இணைந்து ஆட்சியை அமைத்தார். இது தேசிய அரசியலில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பாஜகவுக்கு பின்னடைவு
இது பாஜகவுக்கு கடும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. கூட்டணியை முறித்துக் கொள்வதற்கு இரு நாட்கள் முன்பு கூட அமித் ஷா உடன் நிதிஷ்குமார் பேசியதாகவும் அப்போது கூட அவர் கூட்டணி குறித்து எதுவும் சொல்லவில்லை என்றே கூறப்படுகிறது. பீகார் மாநிலத்தில் ஆட்சியை இழந்துள்ளது 2023 லோக்சபா தேர்தலில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துகளைக் கூறிவருகின்றனர்.

பிரதமர் மோடி
இதற்கிடையே இந்தியா டுடே செய்தி நிறுவனம் சி வோட்டர்ஸ் உடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் இப்போது வெளியாகி உள்ளது. அதில் மக்கள் ஆதரவு பிரதமர் மோடிக்கு அதிகம் உள்ளதாகத் தெரிகிறது. பீகார் குழப்பங்கள் அவருக்கு எவ்வித பெரிய பின்னடைவையும் கொடுத்துவிடவில்லை. எட்டு ஆண்டுகளாக ஆட்சியில் தொடரும் போதிலும், டாப் இடத்தில் பிரதமர் மோடி தான் உள்ளார். எதிர்க்கட்சி தலைவர்களால் பிரதமர் மோடிக்குக் கிடைக்கும் ஆதரவை நெருங்கக் கூட முடியவில்லை.

53% பேர்
பணவீக்கம், கொரோனா பரவல், பெட்ரோல் - டீசல் விலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருந்தபோதிலும், பிரதமர் நரேந்திர மோடி தான் நாட்டில் பிரபலமான அரசியல்வாதியாகத் திகழ்கிறார். வரும் 2023ஆம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் நரேந்திர மோடியே பிரதமராக வர வேண்டும் என சுமார் 53 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

எதிர்க்கட்சிகள்
அவருக்கு அடுத்து ராகுல் காந்தி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இருப்பினும், அவருக்கு வெறும் 9 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு அளிக்கின்றனர். அடுத்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7 சதவீதம் பேர் ஆதரவு அளித்து உள்ளனர். அதேபோல இந்தக் கருத்துக் கணிப்பில் எதிர்க்கட்சியாகக் காங்கிரஸ் செயல்பாடு எப்படி இருக்கிறது என்ற கேள்வி கேட்கப்பட்டு இருந்தது.

காங்கிரஸ்
அதில் சுமார் 40% பேர் எதிர்க்கட்சியாகக் காங்கிரஸ் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாகக் கூறி உள்ளனர். அதேநேரம் 34% பேர் காங்கிரஸ் செயல்பாடுகள் மோசமாக உள்ளதாகத் தெரிவித்து உள்ளனர். மேலும், காங்கிரஸ் கட்சியை மீட்டுக் கொண்டு வர ராகுல் காந்தி தான் சரியான ஆள் என 23% பேரும் மன்மோகன் சிங் தான் சரியான நபர் என்று 16% பேரும் கருத்து தெரிவித்து உள்ளனர். அதேபோல 14% பேர் சச்சின் பைலேட்டால் காங்கிரஸை மீட்க முடியும் என்றும் 9% பேர் மட்டும் பிரியங்கா காந்தியால் கட்சியை மீட்க முடியும் எனத் தெரிவித்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications