பட்ஜெட்டில் வேலை வாய்ப்பு உருவாக்கம் பற்றி அறிவிப்பு இல்லை! ஜோதிமணி எம்பி விமர்சனம்
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 8வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். ஆனால் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்புமே இல்லை என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி விமர்சித்துள்ளார்.
இது குறித்து தனியார் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது வேளாண் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்வோம் என்று மத்திய அரசு வாக்குறுதி கொடுத்திருந்தது. இந்த வாக்குறுதியின் அடிப்படையில்தான் முன்பு போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால் இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. வேளாண் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொடுப்பதற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் ஏதும் வழங்கப்படவில்லை.

கரூர், திருப்பூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களில் பெரிய பிரச்சனை ஏற்படுவதற்கு ஜிஎஸ்டி முக்கிய காரணமாக இருக்கிறது. இரண்டாவதாக பருத்தியின் விலை அதிகமாக இருக்கிறது. என்பதை குறித்து முறையிட்டிருந்தோம். ஆனால் அதை குறைக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வேலைவாய்ப்புகளை பொறுத்த அளவில் மூன்று துறைகள் தான் அதை செய்கின்றன. வேளாண்துறை சிறுகுரு மற்றும் நடுத்தர தொழில்கள் தேவை துறை ஆகியவைதான் இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன. ஆனால் இந்த மூன்று துறைகளையும் உயர்த்தக்கூடிய அறிவிப்புகள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இல்லை.
இது தவிர விலைவாசி உயர்வும் மக்களுக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. நடுத்தர வர்க்கத்தை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சக்கையாக பிழிந்து விட்டனர். வேலைவாய்ப்பு கல்வி மருத்துவம் இப்படி பல துறைகளில் நடுத்தர வர்க்கங்களுக்கு கடுமையான விலைவாசி உயர்வு இருக்கிறது. அதேபோல ஜிஎஸ்டியில் மாற்றம் செய்யாதது நடுத்தர வர்க்கத்தை கடுமையாக பாதித்திருக்கிறது. வரி சலுகை மூலம் மிச்சப்படுத்தப்படும் பணம் ஜிஎஸ்டி மூலம் செலவாகும் தொகைக்கு ஈடாகும் என்று எனக்குத் தோன்றவில்லை.
தற்போது 36 உயிர் காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டிருப்பதும், வருமான வரி உச்சவரம்பு நீட்டிக்கப்பட்டு இருப்பதும் 2 நல்ல விஷயங்களாக நான் பார்க்கிறேன். ஆனால் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்த வரி விலக்கு ஏற்கனவே அமலில் இருந்தது தான். மன்மோகன் சிங் பிரதமராக இருந்த பொழுது கேன்சர் மருந்துகளுக்கான வரி வந்து மிக மிக குறைவாக இருந்தது. ஆனால் பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் கடந்த 10 ஆண்டுகளாக இதற்கான வரி அதிகமாக விதிக்கப்பட்டிருந்தது. அவர்களே வரியை அதிகமாக வசூலித்து விட்டு இப்போது அவர்களை தள்ளுபடி செய்திருக்கிறார்கள்" என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications