ஆரம்பித்தது அட்டூழியம்.. மாட்டிறைச்சி வைத்திருந்ததாக முஸ்லீம் இளைஞர்கள் மீது தாக்குதல்.. ம.பி.யில்
டெல்லி: மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக பரவிய வதந்தியையடுத்து, ஒரு பெண் உட்பட 3 முஸ்லீம்கள், பசு பாதுகாப்பு குண்டர்களால் தாக்கப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலை நடத்தியவர்கள், "ஜெய் ஸ்ரீராம்" என்று, கோஷமிடச் சொல்லி தாக்கியுள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் சியோனி என்றபகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறி ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது. அதில் கையில் கம்பு வைத்துள்ள சில இளைஞர்கள் மாட்டிறைச்சி வைத்துள்ளதாக 4 பேரை அடித்து உதைப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த காட்சியை அப்பகுதியில் போகிறவர்கள் நின்று வேடிக்கை பார்க்கிறார்களே தவிர, தடுக்க யாருக்கும் தைரியம் வரவில்லை. இந்த தாக்குதலில் பெண்ணும் தப்பவில்லை என்பது பெரிய சோகமாகும்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ஸ்ரீராமசேனா அமைப்பை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. அதில் ஒருவர், போபால் பாஜக எம்பியான பெண் சாமியார் சாத்வி பிரக்யாவுடன் புகைப்படம் ஒன்றில் காணப்பட்டவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதனிடையே சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், ஒருவரை கைது செய்துள்ளனர். மத்திய பிரதேசத்தில், கமல்நாத் தலைமையில், காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. மோடி கடந்த முறை, ஆட்சிக்கு வந்த பிறகு வட இந்தியாவின் பல பகுதிகளில் பசு குண்டர்கள் இதுபோல தாக்குதல்களை நடத்தி வந்தனர். இப்போது மீண்டும் அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications