“மோடி” அவதூறு வழக்கு.. குற்றவாளி என தீர்ப்பு! டைமிங்கில் ட்வீட் செய்த ராகுல் காந்தி - எது கடவுள்?
டெல்லி: மோடி பெயர் குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் உண்மையே தன்னுடைய கடவுள் என்றும், அகிம்சை மற்றும் உண்மையை சார்ந்ததே தன்னுடைய மதம் எனவும் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
கர்நாடகா மாநிலம் கோலாரில் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் தேசிய தலைவராக இருந்த ராகுல் காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்கு பின்னால் இருக்கும் "மோடி" என்ற துணை பெயரை குறிப்பிட்டு ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது நாடு முழுவதும் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மோடி சமூகம் மீது ராகுல் காந்தி அவதூறாக பேசியதை எதிர்த்து குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு சூரத் நீதிமன்றத்தில் சுமார் 4 ஆண்டுகளாக இந்த வழக்கு மீதான விசாரிக்கப்பட்டு வந்தது.

வழக்கு விசாரணை
இந்த நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு சூரத் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா முன்பு விசாரணைக்கு வந்தது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்த வழக்கு விசாரணைக்காக சூரத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். சூரத் நகருக்கு வந்த அவரை அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர்.

ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு
ராகுல் காந்திக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம் என்று கூறி சூரத் நகரம் முழுவதும் போஸ்டர்களை அடித்து ஒட்டி இருந்தனர். ராகுல் காந்தியை இந்துஸ்தானின் சிங்கம் என்று அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர். பாஜகவின் சர்வாதிகாரத்துக்கு காங்கிரஸ் பணியாது என்று ராகுல் காந்தி செல்லும் வழி நெடுகிலும் காங்கிரஸ் கட்சியினர் பதாகைகளை ஏந்தி நின்று அவருக்கு வரவேற்பு தெரிவித்தனர்.

தீர்ப்பு
காங்கிரஸ் தொண்டர்களின் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார் ராகுல் காந்தி. அப்போது அவர் அவதூறு வழக்கில் குற்றவாளி மாஜிஸ்திரேட் வர்மா தீர்ப்பு வழங்கினார். இதனை அடுத்து அவருக்கு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இருக்கிறது. அத்துடன் அவருக்கு 30 நாட்கள் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கியது.

ராகுல் காந்தி ட்வீட்
ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது ட்விட்டரில் பதிவிட்டு உள்ள ராகுல் காந்தி, "அகிம்சை மற்றும் உண்மையை சார்ந்ததே என்னுடைய மதம். உண்மையே என் கடவுள். அதை அடைவதற்கான வழியே அகிம்சை." என குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications