அனைத்து மேல்படிப்புக்கும் இனி நுழைவு தேர்வு.. தேசிய அளவில் டெஸ்ட்.. புதிய கல்விக்கொள்கையில் அறிமுகம்
டெல்லி: அனைத்து உயர்கல்விகளுக்கும் தேசிய அளவில் பொதுத்தேர்வுகள் நடக்கும், அதாவது பொறியியல் தொடங்கி அனைத்து விதமான மேல்படிப்புகளுக்கும் இனி நுழைவு தேர்வு நடத்தப்படும் என்று புதிய கல்விக்கொள்கை அறிவித்துள்ளது.
மத்திய அமைச்சரவை மூலம் இன்று புதிய கல்விக்கொள்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது. கடந்த ஒரு வருடமாக திட்டமிட்டப்பட்டு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, இன்று அமைச்சரவை மூலம் இந்த புதிய கல்விக்கொள்கை அனுமதி பெற்றுள்ளது.
தமிழகத்தில் இந்த புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு நிலவி வந்தது. தற்போது மக்கள் கருத்தை கேட்ட பின் புதிய கல்வி கொள்கை அனுமதி பெற்றுள்ளது.
மருத்துவம், சட்டம் தவிர்த்து.. இனி அனைத்து பாடமும் ஒரே "போர்டு" கீழ் இயங்கும்.. புதிய கல்விக்கொள்கை!
தேர்வு கவனம்
இந்த புதிய கல்விக்கொள்கை அதிகமாக தேர்வு முறைகள் மீது கவனம் செலுத்த உள்ளது. மொத்தமாக தற்போது இருக்கும் தேர்வு முறைகளை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி முதலாவதாக 5ம் வகுப்பில் இருந்தே தொழிற் கல்வியை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புத்தக படிப்பு மட்டுமின்று இனி வரும் நாட்களில் பிராக்டிகல் படிப்புகள் மீது கவனம் செலுத்தப்படும் என்று புதிய கல்விக்கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றம்
அதன்படி இனி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் திறமையை சோதனை செய்யும் வகையில் தேர்வுகள் நடத்தப்படும். மாணவர்கள் புத்தகங்களில் இருப்பதை மட்டும் எழுத்துவதை தவிர்த்து தங்கள் தனி திறமையை வெளிக்காட்டும் வகையில் தேர்வுகள் இனி நடத்தப்படும். அதேபோல் அனைத்து விதமான கல்வி நிறுவனங்களுக்கும் இனி ஒரே மாதிரியான விதிமுறைகள், நடைமுறைகள் கொண்டு வரப்படும்.
தேசிய அளவில் தேர்வுகள்
அதேபோல் அனைத்து உயர்கல்விகளுக்கும் தேசிய அளவில் பொதுத்தேர்வுகள் நடக்கும். அதாவது பொறியியல் தொடங்கி அனைத்து விதமான மேல்படிப்புகளுக்கும் இனி நுழைவு தேர்வு நடத்தப்படும். தேசிய தேர்வுகள் அமைப்பு மூலம் தேர்வுகளை நடத்த ஏற்பாடு செய்யப்படும். இதற்கான வழிகாட்டுதல் விரைவில் அறிவிக்கப்படும் என்று தேசிய புதிய கல்விக்கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் உள்ளது
தமிழகத்தில் ஏற்கனவே நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. சில வருடங்களுக்கு முன் அமலில் இருந்த எஞ்சினியரிங் நுழைவு தேர்வும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது எஞ்சினியரிங் உள்ளிட்ட பாடங்களுக்கு நுழைவு தேர்வு கொண்டு வரப்படும் என்று தேசிய கல்விக்கொள்கை அறிவித்துள்ளது. இதற்கு என்ன மாதிரியான எதிர்வினைகள் இருக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.