ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம்.. தமிழக அரசு அரசாணை ரத்து.. தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு
Recommended Video

டெல்லி: தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடியில் மீண்டும் பதற்றம் தொற்றியுள்ளது.
மக்கள் எதிர்ப்பையடுத்து, மே 28-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது தமிழகஅரசு. அதை எதிர்த்து வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த தீர்ப்பை பிறப்பித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் இன்று இந்த தீர்ப்பை நீதிபதி ஏ.கே. கோயல் தலைமையிலான அமர்வு பிறப்பித்துள்ளது.
முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி பகுதியில் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
இந்த குழு தனது ஆய்வறிக்கையை சமீபத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழங்கியது. அதில் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக கூறுவதற்கான ஆதாரமில்லை என்றும், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் கருத்தை கேட்காமலேயே ஆலையை மூடுவதற்கான முடிவை தமிழக அரசு எடுத்தது தவறான செயல் என்றும் கூறியிருந்தது. மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு அனுமதி வழங்கலாம் என்றும் பரிந்துரை வழங்கியிருந்தது.
இந்த நிலையில்தான் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று பசுமைத் தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 3 வாரங்களுக்குள் ஸ்டெர்லைட் ஆலை இயங்க தேவையான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும், துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு, குடிநீர் இணைப்பை மீண்டும் கேட்டு ஸ்டெர்லைட் விண்ணப்பம் செய்யலாம் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு காரணமாக தூத்துக்குடியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே 22ம் தேதி நடந்த போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications