நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் ஜூன் 8-ல் ஆஜராக அமலாக்கத்துறை திடீர் சம்மன்
டெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஜூன் 8-ந் தேதி ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
நாடு விடுதலைக்கு முன்னர் அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனம், ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியாகி வந்தது. இப்பத்திரிகை நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ90 கோடி கடன் கொடுத்தது. ஆனாலும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது.

சு.சுவாமி வழக்கு
பின் 2010-ல் அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகள் யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டன. இந்நிறுவனத்தின் 76% பங்குகள் சோனியா, ராகுல் வசம் உள்ளன. இந்த பங்கு பரிமாற்றத்தில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக எம்.பி. சுப்பிரமணியசுவாமி வழக்கு தொடர்ந்தார்.

சோனியா, ராகுலுக்கு சம்மன்
இவ்வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் அன்னிய செலாவணி மோசடி நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இவ்வழக்கில் சோனியா, ராகுல் காந்தி ஜூன் 8-ந் தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

காங். கடும் கோபம்
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரந்தீப் சுர்ஜிவாலா கூறியதாவது: நாட்டின் விடுதலைக்கு எந்த பங்களிப்பும் செய்யாத கட்சி பாஜக. நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை இலக்கு வைத்து நாட்டு விடுதலைக்குப் போராடிய தியாகசீலர்களை பாஜக அவமதிக்கிறது. 1942-ம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடங்கப்பட்டது. அப்போது பிரிட்டிஷ் அரசாங்கம் அப்பத்திரிகைய ஒடுக்கியது. இப்போது அதே ஒடுக்குமுறையை அமலாக்கப் பிரிவு உள்ளிட்டவை மூலம் மோடி அரசு ஏவிவிடுகிறது என குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பாஜக அரசின் இந்த போக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றார் சுர்ஜிவாலா.

வெளிநாட்டில் ராகுல்
மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், சோனியா, ராகுல் காந்தி ஆகியோர் ஜூன் 8-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. அமலாக்கத்துறை விசாரணைக்கு சோனியா காந்தி ஆஜராவார். ராகுல் காந்தி தற்போது வெளிநாட்டில் இருப்பதால் அவர் நாடு திரும்பிய போதும் மற்றொரு நாளில் ஆஜராவார். இது தொடர்பாக அமலாக்கத்துறையிடம் கூடுதல் கால அவகாசம் கோருவார் ராகுல் காந்தி என்றார்.












Click it and Unblock the Notifications