இன்னும் முடியல... நாளையும் ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜராகனும் - விடாத அமலாக்கத்துறை
டெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்கு விற்பனை குறித்து இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில் நாளையும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.
நாட்டின் விடுதலைக்கு முன்னர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனம். இந்நிறுவனத்தின் சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை செயல்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பத்திரிகை இழப்பை சந்தித்ததால் காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடன் வழங்கியது.
நேஷனல் ஹெரால்டு வழக்கு:ராகுல் காந்தியிடம் 9மணிநேரம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கிடுக்குபிடி விசாரணை
சுப்பிரமணிய சாமியின் வழக்கு
இருப்பினும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மூடப்பட்டு 2010 ஆம் ஆண்டு அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகள் யங் இந்தியா என்ற நிறுவனத்துக்கு மாற்றப்பட்டன. இந்நிறுவனத்தின் 76% பங்குகள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி வசம் உள்ளன. இந்த நிலையில் பாஜக எம்.பி. சுப்பிரமணியசுவாமி பங்கு பரிமாற்றத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி வழக்கு தொடர்ந்தார்.
அமலாக்கத்துறை வழக்கு
இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அந்நிய செலாவணி மோசடி நடந்துள்ளதாக கூறி அமலாக்கத்துறையும் வழக்கு தொடர்ந்தது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு நிதி வழங்கியது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
விசாரணைக்கு ராகுல் காந்தி ஆஜர்
இந்த நிலையில் சோனியா காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக அவர் 23 ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை. இதற்கிடையே இன்று ராகுல் காந்தி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். இதனை கண்டித்து நாடு முழுவதும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாளையும் விசாரணை
இன்று விசாரணைக்கு ஆஜரான ராகுல் காந்தியிடம் அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டது. அப்போது அவரளித்த பதில்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்துக் கொண்டனர். காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை பகல் 2:30 மணியளவில் உணவு இடைவெளிக்காக விடப்பட்டு, பின்னர் தொடங்கியது. இன்று மட்டும் 9 மணி நேரம் ராகுல் காந்தியிடம் விசாரணை மேற்கொண்ட அமலாக்கத்துறை நாளை மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பி இருக்கிறது.