நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கப்பிரிவில் 3வது முறையாக சோனியா ஆஜர்.. டெல்லியில் தொடரும் போராட்டம்
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன்பாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று 3வது முறையாக மீண்டும் ஆஜரானார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தொடர்ந்து தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட பத்திரிகை. நாடு விடுதலைக்கு முன்னரே அசோசியேட் ஜர்னல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை நேரு தொடங்கி சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்புடன் இந்த பத்திரிகையை நேரு தொடங்கினார்.
இப்பத்திரிகைக்கு காங்கிரஸ் கட்சி நிதி வழங்கியது. 2010-ம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது. அதன் பங்குதாரர்கள் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது.

முறைகேடு புகார்
அப்போது அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக கடன் வழங்கப்பட்டது. இக்கடனுக்கு மாற்றாக அந்நிறுவனப் பங்குகள் சோனியா, ராகுல் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக ஏற்கனவே வருமான வரி துறை வழக்குப் பதிவு செய்து அவ்வழக்கு நிலுவையில் உள்ளது.

ராகுலிடம் விசாரணை
இந்நிலையில் இந்த பங்குகள் பரிமாற்றத்தில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கப் பிரிவும் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து ராகுல் காந்தி, சோனியா காந்தி இருவரிடம் விசாரணை நடத்த நோட்டீஸ் அனுப்பியது அமலாக்கப் பிரிவு. ராகுல் காந்தியிடம் ஏற்கனவே பல மணிநேரங்கள் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு விசாரித்தது. அப்போது இந்த விசாரணைக்கு எதிராக டெல்லி மற்றும் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினர்.

6 மணிநேரம் விசாரணை
இதனைத் தொடர்ந்து சோனியா காந்தியும் சில நாட்களுக்கு முன்னர் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன்பாக ஆஜராகினார். அவரிடம் 3 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணைக்கு எதிராக நாடாளுமன்றத்திலும் வெளியேயும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று சோனியா காந்தியிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. சோனியாவிடம் மொத்தம் 6 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

3வது முறையாக ஆஜர்
விசாரணை முடிவில் மீண்டும் சோனியா காந்திக்கு சம்மன் வழங்கப்பட்டது. அதில் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. அதன்படி இன்று 3வதுமுறையாக சோனியா காந்தி அமலாக்கப்பிரிவில் விசாரணைக்கு ஆஜரானார். இதற்காக அவர் தனது வீட்டில் இருந்து மகள் பிரியங்கா காந்தியுடன் காரில் காலை 11 மணிக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகம் வந்தார். அவரிடம் அதிகாரிகள் விசாரணையை துவங்கி உள்ளனர்.
Recommended Video

காங். போராட்டம்- கைது
முன்னதாக சோனியாவிடம் மீண்டும் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் நடத்தியது. அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி போராட்டங்களில் ஈடுபட்டது. டெல்லியில் நேற்று காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் போராட்டத்தில் பங்கேற்று கைதாகினர். தாய் சோனியாவுக்காக தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட தனயன் ராகுல்காந்தியும் கைது செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக இன்றும் காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கிருந்து பேரணி செல்வதை தடுக்கும் வகையில் அலுவலகத்தை சுற்றி போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications