தேசிய நல்லாசிரியர் விருது 2025: தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு பேர் தேர்வு.. யார் அவர்கள்?
டெல்லி: நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான தேசிய ஆசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி மற்றும் திருப்பூர் அரசு பள்ளி ஆசிரியை விஜயலட்சுமிக்கு தேசிய ஆசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த இரு ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றிருக்கும் நிலையில் அவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தேசிய நல்லாசிரியர் விருதுக்காக நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களிடம் இருந்து ஜூன் மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் இருந்து 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

தேசிய நல்லாசிரியர் விருது
அந்த வகையில், நடப்பு ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது பெற தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை மயிலாப்பூர் தனியார் பள்ளி ஆசிரியை ரேவதிக்கு தேசிய ஆசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று திருப்பூர் அரசு பள்ளி ஆசிரியை விஜயலட்சுமிக்கும் தேசிய ஆசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நல்லாசிரியர் விருது பெறுபவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் மற்றும் வெள்ளி பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கையினால் இந்த சான்றிதழை அவர்கள் பெற இருக்கிறார்கள். தமிழகத்தை சேர்ந்த இரு ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றிருக்கும் நிலையில் அவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
ஆசிரியர் தினம்
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதி அன்றே ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஆசிரியர் தின நாளில் மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதினை மத்திய அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் தான் நடப்பு ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பினை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது.
நாடு முழுவதும் 45 ஆசிரியர்கள் தேர்வு
இதில் நாடு முழுவதும் மொத்தம் 45 ஆசிரியர்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு பெண் ஆசிரியர்கள் பெயரும் இடம்பெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டம் பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை வி. விஜயலட்சுமி என்பவர் தேசிய நல்லாசிரியர் விருது பெற தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
திரவுபதி முர்மு வழங்குகிறார்
இதேபோன்று சென்னை பி எஸ் சீனியர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ரேவதி பரமேஸ்வரன் என்பவரும் தேசிய நல்லாசிரியர் விருது பெற தேர்வாகியுள்ளார். தமிகழத்தை சேர்ந்த ஆசிரியர்கள் இருவருக்கும் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி அன்று தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. டெல்லி விஞ்ஞான் பவனில் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி நடக்கும் விழாவின் போது, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இவர்களுக்கு சான்றிதழ், பதக்கங்களை வழங்குகிறார். மேலும் ரூ.50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications