இப்ப லோக்சபா தேர்தல் நடந்தாலும் பாஜக அணி ஈஸியாக 296 இடங்களை கைப்பற்றும்: இந்தியா டுடே கணிப்பு
டெல்லி: லோக்சபா தேர்தல் தற்போது நடத்தப்பட்டாலும் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 296 இடங்களில் வெல்லும் என்கிறது இந்தியா டுடே கருத்து கணிப்பு.
இந்தியா டுடே ஆண்டுக்கு இருமுறை Mood of The Nation Poll என்ற தலைப்பில் கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஆகஸ்ட் மாதங்களில் இந்த கருத்து கணிப்புகளை இந்தியா டுடே வெளியிட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான Mood of The Nation Poll நேற்று இரவு இந்தியா டுடே நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. பொதுவாக லோக்சபா தொகுதிகளை மையமாக வைத்து இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அதனால் சட்டசபை தேர்தல் நடைபெறக் கூடிய உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் மாநில தேர்தல் நிலவரங்களை இந்த கணிப்புகள் குறிக்காது.
மேலும் 5 சட்டசபை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பஞ்சாப் தவிர இதரவற்றில் பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு மிகுந்த ஆதரவு இருப்பதாக இந்தியா டுடே கூறுகிறது. பஞ்சாப் தவிர இதர மாநிலங்களில் பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு 50%-க்கு அதிகமான ஆதரவு உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 37% பேர்தான் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும் தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்றால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 296 இடங்களைக் கைப்பற்றும் என்கிறது இக்கணிப்பு. பாஜக மட்டுமே 271 இடங்களில் வெல்லும் என்றும் இந்தியா டுடே கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.